சனி, 6 ஆகஸ்ட், 2011

வெள்ளி பூத்து விடியும் வானம்......!

விஸ்மிக்கு தன் மகன் கியாஸின் போக்கு அறவே பிடிக்கவில்லை! எதிர்த்துப் பேசிச் சண்டை போடுமளவுக்கு வளர்ந்து (வந்து)விட்டான்.
எவ்வளவோ புத்திமதிகள் சொன்னாள் விஸ்மி.கியாஸ் செவிமடுக்கவேயில்ல!தந்தை இல்லையே என்று செல்லம் கொடுத்து வளர்த்தது இவ்வளவு தப்பாய்ப்  போயிட்டு... என்று தனக்குள் அழுது கொண்டாள் விஸ்மி.ஆம் விஸ்மி ஓர் அநாதை. தன் கணவன் வெளிநாடு போனவர் அங்கேயே  'நானி' எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு,அந்த ஆசை நாயகியுடன் வாழ்வதால் தனது மனைவி, பிள்ளையை மறந்து விட்டார்.எந்தவித தொடர்புகளுமே இல்லாத கியாஸுக்கு அப்போது ஒரு வயது முடிந்து விட்டது.விஸ்மிக்கு கணவன் துரோகம் செய்த விடயம் தன் ஊர் நண்பர்கள் மூலமாக தெரிந்த போது அவளுக்கு தன் எதிர்கால வாழ்வு வெறும் சூன்யமாகவே பட்டது.என்ன செய்வதென்றே தெரியாமல் தடு மாறினாள்.தன் சொந்த ஊரில் பேசி வந்த திருமணங்களையெல்லாம் உதறித் தள்ளிய விஸ்மி மிக....மிக....எதிர்பார்ப்புக்களுடன், ஆசைகளுடன்,அன்புடனும் உயிருக்கு உயிராக முஹம்மதை திருமணம் செய்து கொண்ட நா(ள்)ல் இருந்து உற்றார்,உறவினர் என்று யாருமே அற்றவளாகி விட்டாள்.தன் சின்ன மகனுக்காக அன்றிலிருந்து உழைக்கத் தொடங்கினாள். அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலே வேலைகள் செய்து வாழ்வை ஓட்டினாள்! கியா(ஸ்)சையும் வளர்த்தாள்! நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தாள்! படிக்க விட்டாள்! எல்லாவற்றையும் விட அன்பை அடைமழையாய் பொழிந்தாள்! செல்லமாய் வளர்த்தாள்! கியாஸ் கேட்ட எதையுமே அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாவது வாங்கிக்கொடுத்தாள். பெரியவனாய் வளர்ந்த பின்னும் கியாஸை ஒரு குழந்தையாகவே எண்ணிச் செல்லம் பொழிந்தாள்! தந்தை இல்லாத குறையே  தெரியாத கியாஸ் தன்னிஷ்டம் போல எதையுமே செய்தான். வளர்ந்து வாலிப வயது வந்த பின் தான் பிடித்த முயலுக்கே மூன்று  கால் என்ற அளவுக்கு வந்து விட்டான். தான் எது செய்தாலும் அது நல்லது என்றே தாயுடன் வாதாடினான்.கெட்ட சிநேகிதர்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்க்கொண்டிருந்தான்.
துப்பாக்கி வேட்டுக்களும்,ஆட்கடத்தல்களும்,கொள்ளைகளும்,வாகன விபத்துகளும்,இயற்கை அழிவுகளும்,விலையேற்றங்களின் தாக்கங்களும் நிறைந்துள்ள கிராமத்துக்குள் வாழும் தன் மகனை நல்ல மனமுள்ள,உதவும் கரமுள்ள பிள்ளையாக வளர்க்க வேண்டுமென்பதே விஸ்மியின் ஆசையும்,எதிர்பார்ப்புக்களுமாகும்.
ஆனாலும் அவளது ஆசைகளும்,எதிர்பார்ப்புக்களும் மண்ணோடு மண்ணாகிப் போயின! விஸ்மியால் இனிமேல் பொறுக்க முடியவில்லை.நன்றாக ஏசிவிட்டாள்!
இதனை எதிர்பாராத கியாஸ்.....ச்சீ....நீயும் ஒரு தாயா.......? என்று கேட்டுவிட்டு....வாய்க்கு வந்தவாறு அவளை ஏசிய வண்ணம் வெளியிறங்கிப் போனான்.
விஸ்மிக்கு அழுகை வந்தது....எவ்வளவு அன்பாக வளர்த்தாள்....எவ்வளவு கஷ்டப்பட்டாள்...? நீயும் ஒரு தாயா..?என்று மகன் கேட்டதை நினைத்து நினைத்து கவலைப்பட்டாள்.......வெளியே சென்ற கியாஸின் காதில் கேட்டது அந்த சொற்பொழிவு..தனது அன்னை வருந்திச் சுமந்து (ஒருவனை) வருந்திப் பெறுகின்றாள் அவனை அவள் சுமத்தலும் பால் மறப்பித்தலும் முப்பது மாதங்களாகும்.
நபி(ஸல்)அவர்கள் ,"சொன்னார்கள் பெற்றோரே ஒரு பிள்ளையின் சுவர்க்கமும், நரகமும்  என்றும்.   
அதாவது  அவர்களுக்கு  (தாய்,தந்தைகளுக்கு நன்றி செலுத்தி வழிபட்டு நடந்தால் சுவர்க்கம் நன்றி கெட்டு மாறுசெய்தால் நரகம்.எனச் சொன்னார்கள். ஒருவன் தன் பெற்றோரின் மண்ணறையை ஜியாரத்துச் செய்வானாயின்  அவன் எடுத்து வைக்கும்   ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் நூறு  நன்மைகளை அவனுக்கு எழுதுகின்றான் . பெற்றோரிடம் நன்றியுடன்  நடந்து அவர்களை அன்புடன் நோக்குவானாயின்  அவனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுடைய  நன்மையை அல்லாஹ்  வழங்குகிறான்.இமாம் ஹஸனுள் பஸரீ(ரஹ்)அவர்கள் ஒரு முறை கஃபாவைத் தவாப் செய்து கொண்டிருந்தார்கள்.அது சமயம் ஒரு மனிதன் ஒரு பெரிய பெட்டியைத் தன் தோளின் மீது சுமந்தவனாகத் தவாப் செய்து கொண்டிருந்தான்.அம்மனிதனை விளித்து,'நீ ஒழுக்கக் குறையாக இவ்வளவு பெரிய பெட்டியைச் சுமந்து கொண்டு தவாப் செய்கின்றாயே ஏன்? எனக் கேட்டார்கள்.அப்பொழுது ஒழுக்கக் குறைவுடன் எதையும் செய்யவில்லை பெரியார் அவர்களே!நான் இப் பெட்டியில் தனது வயது முதிர்ச்சியால் தளர்ந்து போன என் அன்னை இருக்கின்றார்கள்.அவர்களால் தவாப் செய்ய இயலாது;அவர்களுக்குப் பகரமாக அக்கடமையை ஆற்றுவதன் மூலம் நான் என் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணி விடையையும்,அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையையும் நான் நிறைவேற்றுவதன்  மூலம்,அவர்களுக்கு நன்றி செலுத்தியவனாகவும் ஆகுவேன் அல்லவா? எனக் கூறினான்..அவன்  கூறியதைக் கேட்ட இமாம் அவர்கள் "நீ கிழக்கிலிருந்து  மேற்குவரை எழுபது  முறை உன்  அன்னையச் சுமந்து  திரிந்துப் பணி விடை செய்த  போதிலும் ,நீ உன் அன்னையின் வயிற்றில் புரண்டிட்ட போது   அவளுக்கு வேதனை ஏற்பட்டிருக்குமே,அதற்கு நிகராக நீ செய்திடும் இப் பணி விடைகள் ஈடாகாது"என்றார்கள்.
"மன்ரலியே அன்ஹு வாலிதா ஹுஃப அன அன்ஹு ராலின்."என்று அல்லாஹ் ஹதீஸ்குத்ஸியில் கூறுகின்றான்.
எவனாவது பெற்றோர்கள் ஒருவனை பொருந்திக்கொள்கிறானோ,நேசிக்கின்றானோ,அவனை நான் பொருந்திக்கொள்கின்றேன்.என்று'
இதனால் தான்"தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கின்றது.முதுமைப் பருவத்தை எத்தி விட்டு பெற்றோரைக் கவனிக்காமல் அவர்களுடன் நல்லுறவு கொள்ளாமல்,அவர்கள் மனம் புண்படும் படி நடந்து கொண்டதன் காரணமாகப் பெற்றோரின் "பதுஆ"விற்கு ஆளான பிள்ளைகள்,இறைவனின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகி விடுவார்களாயின் அவர்கள் சுவர்க்கத்தை அடைவது எளிதான செயலல்ல என்பதாகும்.பெற்றோரின் சொல்லைத் தட்டி நடப்பவன் அல்லாஹ்வை விட்டும்,வானவர்கள் சுவர்க்கம் நல்லோர்கள் அனைவரையும் விட்டும் தொலைவானவன்.
எவன் தாய் தந்தையரை அடிப்பதற்காக கையை ஓங்குவானோ,அவனின் கையைக் கழுத்துடன் கட்டப்பட்டுப் பழுதாக்கப்படும்,"கை வெட்டப்பட்டு விடும்"அவன் சிராத்துல் முஸ்த்தகீம் என்னும் பாலத்தைக் கடக்கு முன்..
"எவன் பெற்றோரை ஏசுவானோ கப்றில் அவனது விலாப்புறத்தில் மழைத் துளிகளைப் போன்று நெருப்புக் கங்குகள் பறக்கும்"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அமைதியான முறையில் மார்க்கப் போதனையை கேட்டு விட்டு கியாஸ்  எழும்பினான்.
மனதில் வேதனைகள் தொடரலானது.ஆம்! தன் தாயை கேவலமாகப் பேசி விட்டேனே என்று!
வீட்டுக்குப் போய் தன் தாயை பார்ப்பதற்காக செல்லும் போது கியாஸின்  கண்களில் பட்டது இந்த காட்சி.
ஆம்! ஒரு ஜனாஸாவை தூக்கிக் கொன்டு கப்ரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.ஜனாஸாவிக்குப்  பின்னால் ஒரு சிறுவன் கதறி கதறி அழுது சென்ற காட்சி அனைவரையுமே அழவைத்தது.யார் மெளதானது என்று தெரியாமல் கியாஸ் ஜனாஸாவோடு சென்ற ஒரு மனிதனிடம் கேட்டான்...."இதோ இவனுடைய தாய் தான்"....உம்மா மட்டும் தான் இவனுக்குத் துணையாக இருந்தாங்க! வாப்பா இல்ல....பாவாம்....இப்ப உம்மாவும் மெளத்தாகி விட்டா...அவன்,இனி யாருமே இல்லையே என்று கத்துறான்...அது மட்டுமல்ல....அவனுக்கு உம்மா மேல சரியான அன்பு! உம்மாவும் மகன்மேல கொள்ளை அன்பு....இப்ப பிரிஞ்சிட்டப்போ இவன் துடிக்காம என்ன செய்வான் தம்பி...? இவ்வளவையும் சொன்ன மனிதன்,அழுது கொண்டு சென்ற சிறுவனை கியாஸுக்கு காட்டினான்.தன் தவறை உணர்ந்தான் கியாஸ்.தாயின் சிறப்பினை நினைத்துப்பார்த்தான்.

பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை!

கண்ணே! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே!
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதம்!

ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துவங்க வைத்தாள்! உய்வோம்.

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்.
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள்!

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துவங்க வைத்தாள்
தொட்டுப் பேசி துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை!

உதிரந் தன்னைப் பாலாய் உதிர்ந்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில்!

கவிதை மனதில் அலையாய் பொங்கியது!எவ்வளவு பாசம் என் அன்னை! நான் எவ்வளவு துன்பப்படுத்திட்டேன்,என்று நினைத்து கியாஸ்,உடனடியாக வீட்டுக்கு ஓடி உம்மாவைப் கட்டிப் பிடித்துத் துன்பம் தீரும் வரை அழுதான்.இது வரை செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்...தாயின் உள்ளம் குளிர்ந்தது!மகனைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் விஸ்மி.........!
                                                                                                                

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஒரு நண்பியின் கதை...!!!

நேரம் பகல் ஒரு மணி இருக்கும்.லஞ்ச் எடுத்துக் கொண்ட லட்சுமி கைகளைத் துடைத்துக் கொண்டே ரெஸ்ட் எடுப்பதற்காகத் தான் அறையினுள் சென்று கட்டிலில் மெதுவாகச் சாய்ந்தாள்
.அவளது ரெஸ்டைக்  கலைத்து விடும் வகையில் வாசற் கேற்றடியில் தபாற்காரன் சங்கரதாசின் சைக்கிள் மணி ஓசை கேட்டு விரைந்து சென்ற லட்சுமியின் கரத்தில் சிரித்துக் கொண்டே சங்கரதாஸ் போஸ்மன் இன்று ஒரே ஒரு கடிதம் தான் வந்துள்ளது என்று சொன்ன படியே கடிதத்தைக் கொடுத்து விட்டு மறைந்தான்.
லட்சுமி கடிதத்தை வங்கிக் கொண்டு தன் மேசையருகில் வந்து வழமை போலவே அக் கடிதத்தை அவசர அவசரமாகப் பிரிந்தாள்
 அறிமுகமில்லாத ஓர் புதிய கடிதத்தில்  முத்து முத்தான அழகிய எழுத்துக்கள்.ஆசையோடு படிக்கத் துவங்கினால்;அதில்.....
 கவிதாவுள்ளம் கொண்ட ஆசிரியைக்
 கலைவந்தனங்கள்.நான் கடந்த வாரம் வெளி வந்த தினகரன் வாரமலரின் மலையக மஞ்சரிப் பகுதியிலிருந்து உங்களது முகவரியை பெற்றுக் கொண்டேன்
 தாங்கள் கலையுள்ளங்களின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மலையகத்திலிருந்து மாதா மாதம் மலையூற்று எனும் பெயரில் ஓர் கலை இலக்கியச் சஞ்சிகை வெளிவருவதாக அறிந்தேன்
 உடனே அதைப் படிக்க வேண்டும் அதற்கு எழுத வேண்டும் என்று என்னுள்ளம் துடிக்கவே இம்மடலை நான் வரைகின்றேன்.
எனவே உங்களால் வெளியிடப்படும் மலையூற்று இதழின் ஓர் பிரதியை எனக்கு அனுப்புமாறு அன்போடு வேண்டுகிறேன்.அதற்கான அன்பளிப்பை உடன் அனுப்பி வைப்பேன்.உங்களது முயற்சி வெற்றி பெற எந்தன் உதவிகளும் ஒத்துழைப்புகளும் என்றுமே உண்டு.ஏனையவை பின் தொடரும்.-
நன்றி,
இவ்வண்ணம் இலக்கியதாகமுள்ள கலைவதனன்
கடிதத்தைப் படித்த லட்சுமி;கலைவதனின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் உடனே மலையூற்று இதழை தபால் மூலம் அனுப்பி வைத்தாள்.
இதன் விளைவு அடிக்கடி நானா தங்கையாக மடல்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள்.நாட்கள் நகர நகர இவர்களின் சகோதர உறவு மாறி பாச எல்லை மீறி மிகவும் இறுக்கமான காதலாக மாறியது.
லட்சுமியின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக கலைவதனன் தன் குடும்ப நிலைமைகளை மனம் திறந்து எழுதுவான்
லட்சுமியும் அவ்வப்போது மன வேதனைகளுக்கு ஆறுதல் படுத்தி,'துன்ப நிலையும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி கிளியே
 அன்புக் கழிவில்லை'எனும் பாரதியின் சிந்தனை ஊற்றை எடுத்துக் காட்டி பதில் வரைவாள்.
ஒரு நாள பேராதனையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள தன் அக்கா வீடு சென்ற லட்சுமி பாசிக் குடாவில் வைத்து முன் ஏற்பாட்டின் படி கலைவதனைச் சந்தித்தாள்
கறிவேப்பிலை கொத்து மாதிரி இளைஞன்,அலை அலையான சுருள் முடி,அரும்பு மீசை,ஆணழகன் போட்டியில் முதற்பரிசு கிடைக்கும் அளவுக்கு உடற்கட்டு
வங்கியில் காசாளர் பதவி.இத்தனை லட்சணங்களும் பொருந்திய அவன் வேதனையோடு மனம் திறந்து பேசினான்
அப்போது தான் அவன் சோகமே லட்சுமியை பரிதாபத்துக்குள்ளக்கியது.லட்சுமி நான் பிறந்த இடம் மலையகம் தான்.என் தாய் கொட்டும் மழையிலும்,மலையேறி இறங்கிய பாதங்கள் சோர்வுற்று சங்கொலி கேட்ட செவிகள் அடைத்து படுத்த படுக்கையாய் லயத்தில் தஞ்சமடைந்தார்
இதன் விளைவு என் எதிர் கால வாழ்வுக்காய் பல நூறு கற்பனைகளைச் சுமந்து விழித்திருந்த உத்தமியின் விழிகள் எனது ஐந்தாவது வயதில் நிரந்தரமாகவே மூட்டி விட்டது
இந்த நிலையில் பாசமில்லா தந்தையின் இரண்டாவது மனைவியின் அரவணைப்பில் எவ்வித உடன் பிறப்புக்களும் இன்றி தன்னந்தனிமையில் வாழ்ந்தேன்
பெண்கள் போலவே சகல வேலைகளையும் நானே செய்வேன். சமைத்து உண்டு,படித்து சிரமங்கள் மத்தியில் தொழிலை விடா முயற்சியினால் பெற்று இன்று தொழில் நிமிர்த்தம் இங்கு வசிக்கின்றேன்
தற்போது முப்பது வயதாகியும் கூட ஒரு மணப் பெண்ணைக் கட்டித் தர யாருமேயற்ற அநாதையாக இன்று வாழ்கிறேன
  தன்   உள்ளத்தை லட்சுமியின் சந்திப்பின் போது வெளிப்படுத்திக் காட்டினான்  
என்னிதயத்தில் குடி அமர யாருக்குமே இடமேயில்லை.இடமளிக்கவும் மாட்டேன். கலைவதனன்
நிழலைத் தவிர இன்னும் ஓர் ஆடவனின் நிழலைக் கூட இந்த லட்சுமியில் பட விட மாட்டேன் என்னுயிருள்ள வரை தாய்க்குத் தாயாக உடன் பிறப்புக்கு உடன் பிறப்பாக மனைவிக்கு மனைவியாக இருந்து உங்கள் மனம் வேதனைப்படாமல் கண் கலங்காமல் உங்களுக்குத் துணையாய் நான் இருந்து வாழ்வேன்.என்று உறுதிகளை சத்திய வாக்கின் மூலம் கலைவதனுக்குக் கூறிவிட்டு அவளிடமிருந்து பிரிய மனம் இன்றி விடைபெற்றுக் கொண்டாள் லட்சுமி
.இவர்களின் உறவு இப்படியே துளிர் விட்டு செழித்து வளரத் துவங்கியது.இதை அறிந்த லட்சுமியின் அக்கா தயா இருவரையும் எவ்விதத்திலாவது சரி பிரித்து விட்டு தன் கணவனின் தம்பிக்குத் தங்கையை கட்டிவைக்கத் திட்டம் தீட்டினாள்.
.இல்லாத குறைகளையும் பொல்லாத பொய்களையும் கலைவதனன் மேல் சுமத்தி லட்சுமியை தந்தையிடம் சொல்லிக் கொடுத்தாள்.
இதன் விளைவு லட்சுமி மீது உயிரையே வைத்து இருந்தது
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுமடி' என வாழ்ந்த அப்பா லட்சுமியின் மீது கடலலை போல சீறிப் பாய்ந்து பேசினான்.
லட்சுமி எதுவுமே பேசாமல் பொறுமை ஒன்றே சிறந்த பொக்கிஷமெனக் கருதிக் கொண்டு மௌனத்தைத் தன் ஆடையாய் போர்த்திக் கொண்டாள்.
அடுத்த நாள் லட்சுமியின் அப்பா சண்முகப்பிள்ளை மனைவியை அழைத்து பெருமாள்;பின்னேரம் லட்சுமியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க.எல்லாவற்றையும் கவனித்துக் கொள் என்று  சொன்னார்.
பெருமாளுக்கு கணவன் சண்முகத்தின் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறு எதுவுமே பதிலாகப் பேச தைரியம் ஏற்படவில்லை.கணவர் பேசிய பையனுடைய திருக்கல்யாணக் குணங்களைப் பற்றி அறிந்தும் கூடத் தன் மகளை கரம் பிடித்துக் கொடுப்பது  தற்கொலைக்குச் சமன்;என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
மாலை நேரம் குறிப்பிட்டபடி அவர்கள் பெண் பார்க்க வந்தார்கள்.
பெண்ணை எங்களுக்கு நன்றாகவே பிடிச்சுப் போச்சு இனி திரு மண ஏற்பாடுகளைத் துரித மாக்கி கொட்டும் மேளம் தாலி கட்ட வேண்டியது தான் என்று சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா.
மாப்பிள்ளையின் அம்மா நாங்க பெத்தவங்களோட கஷ்ட நஷ்டங்களை,துன்ப துயரங்களை நன்கு புரிந்தவங்க தான்.ஆனாலும் மற்றவங்க சீதனமா தந்தார்கள் என்று கேட்டா மதிப்பாக நாங்க சொல்ல வேண்டும் என்ன?
அப்போ எங்களை விட பெருமை உங்கள் மகளுக்குத்தானே உண்டு
பெரிய மரியாதையாக,கௌரவமாக உங்கள் பெண்ணை மதிப்பினம் என்றவாறே தன் காளையை கன்னி மரத்தில் கட்டி வைப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபாவை ஏல விற்பனைக்காக மதிப்பீடு செய்தான்.
எல்லாவற்றையும் அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்த பெண்ணின் பெற்றோர் சரி;என்று சொன்னவாறே காலம் முழுவதும் வாழப் போறது நம்ம மகள் தானே,முதலில் லட்சுமியின் விருப்பத்தை கேட்போம் என்றவாறு லட்சுமி;உனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கம்மா?என்று கேட்டார் சண்முகப்பிள்ளை.
ஆமாம் அப்பா நல்லாப் பிடிச்சிருக்கு என்றாள் லட்சுமி.சக்கரைப் பந்தலில் தேன் மாறி பொழிந்ததைப் போன்ற  இன்பமான மகிழ்ச்சியோடு சரி நாங்க போகிறோம்,இனி ஏனைய திருமண விடயங்களைக் கவனிப்போம் என சொல்லிக் கொண்டு இருப்பிடத்தை விட்டு எழுந்தார்கள்
லஷ்மி,அவர்களைப் பார்த்து ஒரு சிறிய விஷயம் தவறாக என்னை இடைபோட வேண்டாம் உங்களுடன் பேச எனக்கு சிறு ஆசை என்றாள்.....
மாப்பிள்ளை வீட்டார் ஆசையோடு என்ன என்று கேட்பதை போல் பாசமோடு பார்வையை லஷ்மியின் மீது படர விட்டார்கள்.
உங்களுடைய மகனின் குணத்திற்கும்,பண்பிற்கும் என்னைப் பெற்றவர்கள் தருகின்ற அன்பளிப்புக்குப் பேர் தான் வரதட்சனை என்றால்,ஒழுக்கம் கேட்டுப் போய் சூதாடி மற்றப் பெண்களோடு தொடர்பு வைத்து சீரழிஞ்சு போய் நட மாடும் ஒருவனைக் கட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டிய எனக்காக அவரைப் பெற்றவங்க என்ற ரீதியில் எனக்கு நீங்கள் தர வேண்டிய இன்னலுக்கு என்ன சொல்வது?
இவைகளை நீங்க மறைத்து மூடி நல்ல பசுமையானவர்கள் போல் தானே சம்பந்தம் பேசி தூய்மையான பெண்ணின் வாழ்விற்கு கலங்கத்தை ஏற்படுத்த வந்தீர்கள்?
என்ன தலையை குணிந்து எல்லாமே உண்மையென்று ஏற்றுக்கொள்வதற்காக இந்த மௌனராகத்தை இசைக்கின்றீர்களா?
சரி சரி அவரை நான் மணந்து திருத்தப் போகிறேன்.நல்லவராக மாற்றியமைக்கப் போகிறேன்.
ஆனால்,என் திருமண வாழ்விற்காக நீங்க இந்த மலைநாட்டுப் பெண்ணிடம் வாங்கப் போகின்ற வரதட்சனை பற்றி எதுவுமே வேண்டாம். நாம் எதிபார்க்கவில்லையென்று சொன்னால் சரி.வந்தவர்கள் உடனே எதுவுமே பதிலாகப் பேசாது திரும்பி விட்டார்கள்
லட்சுமி மனம் விரும்பியவனை மணமகனாய் பெரும் எதிர் பார்ப்புடன் ஏங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது எண்ணங்களைச் சுமந்து பறந்து வந்த மடலொன்று லட்சுமியின் கரங்களை முத்தமிட்டது
மடலை ஆவலோடு உடைத்தாள்.என் அன்பு லட்சமி;நான் உங்களை அன்போடு நேசித்தேன்.மனமாற விரும்பினேன்.அதே போல் நீங்களும் என்னை நேசித்தீர்கள்.விரும்பினீர்கள்.ஆனால் இன்று எமது உறவுக்கு உங்கள் தந்தையார் எவ்வித ஆதரவும் தராமல் எதிர்ப்பாக இருப்பதாகவும் என் நண்பனை உங்களுக்குத் திருமணம் பேசித் தீர்மானம் எடுத்து விட்டதாகவும் இன்று அறிந்தேன்.
வேதனை மேல் வேதனையாக சோதனைகளை சுமக்க முடியாத மனநிலையில் நான் இன்று இரவு தமிழ் நாடு செல்கிறேன்.
.நான் உங்களை உடலால் பிரிந்து அங்கு செல்கின்றேனே தவிர என் உள்ளம் உங்களைப் பிரிந்து அங்கு செல்லவில்லை.உங்கள் நினைவு நித்தமும் என்னிதயத்தரையில் நிழலாடிக் கொண்டேயிருக்கும
உங்கள் மனநிலை எனக்குத் தெரியும்.ப்ளிஸ் என்னை என் பிரிவை நினைத்து கவலைப் பட வேண்டாம்.என்றோ  ஒரு நாள் உயிர் இருந்தாள் என் பிறந்த மண்ணான மலயகத்திற்கே மீள வருவேன்.
அப்போ உங்களை நேரில் சந்திக்கின்றேன்.உங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன்.இந்த அஞ்சல் உங்கள் வசம் கிடைக்கும் போது தமிழ் நாட்டில் இருப்பேன்.உங்கள் நினைவுகளைச் சுமந்து தமிழ் நாட்டில் கண்ணீரோடு சங்கமிக்கிறேன்.நீங்கள் நல்லபடி வாழ மன நிறைவோடு வாழ்த்துகின்றேன்.
                                                                                                                                               நன்றி.இவன் உங்கள்                                                                                                                    நினைவில் வாடும்
                                                                            கலைவதணன்  .                     
 மடலை படித்த லட்சுமியின் மனம் அனலிடப்பட்ட மெழுகு போல் உருவாகியது தன் உறவுக்குத் தடையாய் நின்றவர்களை நினைத்து நினைத்து வருந்தினாள்.அவளது சோகம் அவளை விட்டுத்தான் போகுமா..........? மலைப்பாறைகளில் இருந்து கீழ் நோக்கி வடிந்து ஓடி வரும் தண்ணீரோடு அவள் இதயத்திலிருந்து பொங்கி வரும் கண்ணீர் சோக பள்ளத்தினுள் சங்கமானது.
       

                                                  

எதிர்பாரத நிகழ்வுகள்..........!

ஹோட்டலில் இருந்து சாப்பாட்டுப் பார்சலுடன் வீடு வந்து சேர்ந்த நான் நேரத்தைப் பார்க்கிறேன்.ஓ......மணி 2 -30 ஆகப் போகிறதே.தங்கை சுல்பாவை இன்னும் காணோமே?வழமையாக இரண்டு மணிக்குமுன் வீட்டில் இருப்பாளே.அவசர அவசரமாகவே வாசலில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் வீதியைப் பார்க்கிறேன்.மனம் பதறுகிறது.சுல்பாவைக் காணவில்லை.இன்னுமொரு அரைமணி நேரம் பார்த்து விட்டு அவளைத் தேடிச் செல்வோம் என எண்ணியவாறு முன் ஹோலிலுள்ள ஈஸிச் செயாரில் சாய்கிறேன்.எனக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கும் தங்கை சுல்பாவைத் தவிர யார் தான் இருக்கிறார்கள்.சுல்பாவைப் பார்க்க முன்னே என் வாப்பா இறைவனடி போய் விட்டார்.அந்தத் துயரில் சுல்பாவை என் கையில் ஒப்படைத்து விட்டு தாயும் காலமாகிவிட்டாள்.அநாதைகளாகி சின்னம்மாவின் பராமரிப்பில் வளர்த்தோம்.எமது துரதிர்ஷ்டமோ என்னவோ நான் பத்து வயதை அடைந்த பின் சின்னம்மா விபத்தொன்றில் காலமாக,ஐந்து வயதுத் தங்கை சுல்பாவோடு தனித்து விடப்பட்டேன்.அந்த பத்து  வயதில் இருந்தே நான் அங்கே இங்கே என்று சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்து என் அன்புத் தங்கை சுல்பாவை வளர்த்துப் படிக்க வைத்துப் பூரிப்படைந்தேன்.நான் தான் எத்தனை கஷ்டங்களைச் சகித்திருப்பேன்.வறுமையின் சின்னமாய் சுல்பா வனப்பு மிகு செல்வியானாள்.அவளைப் படிக்க வைத்து ஓர் பட்டதாரியாக்கி..........நான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாமாகச் சேர்த்து இறுதியாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்ற ஆதங்கத்தில் உறுதியோடு உழைத்தேன்.ஆம்......என் கனவுகள் நனவாகின.என் தங்கை படித்து பட்டதாரி ஆசிரியையாகியும் விட்டாள்.இனி என் கனவுகள் எல்லாம் அவளை நல்ல கணவனுக்குக் கைப்பாற்றி  கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனாலும்........கையிலே அதற்குரிய பணமின்றி என் எண்ணத்தில் கீறல் விழுந்தது.பிறரிடம் கை நீட்டாமல் சுயமாக உழைத்து அவளைப் படிக்க வைத்தேன். இன்று சீதனத்துக்காக எப்படி ஆயிரக்கணக்கில் சேர்ப்பேன்.....என்ன நானா.....நான் வந்தது கூடத் தெரியாம ...இவ்வளவு பலமா யோசிக்கின்றீர்களே.......என்கிட்ட சொல்லக் கூடாதா? நீங்க கவலைப் பட்டா......நான் எப்பிடி நானா சிரிப்பேன்? என்ற சுல்பாவின் குரல் கேட்ட நான் அடடே,வந்திட்டியாம்மா....லேட் ஆயிடுச்சே என்று யோசிச்சிட்டிருந்தேன்.ஏம்மா லேட்? சாப்பிடு போய்.இப்ப தான் எனக்கு நிம்மதி.நீ கொஞ்சம் லேட்டா வந்தா இந்த நானா படுற துன்பம் கொஞ்சமா? சிரித்துக் கொண்டே சொன்னேன்.இன்னைக்கு ஸ்டாப் மீட்டிங் நானா அதுதான் என்று சொல்லிக் கொண்டே சுல்பா தனது ரூமிற்குள் நுழைவதைப் பார்த்து ஒரு கணம் அதிசயித்தேன்.என் தங்கை எவ்வளவு அழகு.ஒரு தந்தைக்குரிய மகிழ்ச்சியில் மீண்டு அவள் எதிர்கால வஸந்ததுக்காக நான் கற்பனை பண்ணத் தொடங்கினேன்.ரூமிற்குள் சென்ற சுல்பாவை இன்னுமே காணமே என்ற நினைவு வர மெதுவாக  எட்டிப் பார்த்தேன். அப்படியே உடையைக் கூட மாற்றாமல் என்ன யோசிக்கிறாள்.என்ன சுல்பா....?ஏன் இந்த யோசனை....ஒரு நாளும் இல்லாத மாதிரி?ஏம்மா ஒரு மாதிரியிருக்கே.என்று அவள் நெற்றியைத் தொட்டுப்  பார்த்தேன்.ஒரு வேளை காச்சலாக இருக்குமோ என்னவோஎன்று ஆனால் அப்படி ஒன்றுமேயில்லை.அவள் தலையை வருடியபடியே ஆறுதலாக மீண்டும் கேட்டேன்.நானா...வந்து ....உன் கிட்ட ஒரு விஷயம்...அதாவது...அவள் தடுமாறியதைப் பார்த்து ஓரளவு புரிந்து கொண்டவனாக,தைரியமூட்டி விஷயத்தை வெளிப்படுத்த வைக்கிறேன்.அந்த விஷயம் இனிமையாகவே இருந்தது.ஆம் அவளோடு ஒன்றாகப் படிப்பிக்கும் ஸும்ரி என்னும் ஆசிரியன் இவளைத்  திருமணம் செய்ய விரும்பியதாய் இருந்தான்.இந்த வார்த்தைகளை நானத்துடனே சொன்ன சுல்பாவின் நயனங்களை உற்று நோக்குகிறேன்.வெட்கத்துடன் முகம் சிவக்க அவள் என் முடிவுக்காக என்னைப் பார்க்கிறாள்.நான் கூட இதைப்பத்தித்தான் யோசிச்சிட்டிருந்தேன் சுல்பா.நானாவுக்கு விருப்பம் என்று அவளிடம் கூறுகிறேன்.சுல்பா,ஸும்றியிடம் சொன்னதற்கிணங்க.....அவனின் பெற்றோர் என் வீட்டிற்கு குறித்த தினத்தில் வந்து சேர்ந்தனர்.வந்தவர்களைக் கண்ட என் மனம் ஆச்சரியத்தில் ஸ்தம்பிதமடைய வாருங்கள்........வாருங்கள் என்று அவசரமாக வரவேற்று உபசரித்தேன்.என்னைக் கண்ட அவர்களின் முகங்களில் மலர்ச்சி..........உன் தங்கையா ஸப்ரி ரொம்பவே மகிழ்ச்சி என்று என் தங்கையை அணைத்து மாமி முத்தமிடுகிறாள்...............என் தங்கைக்கு மாமியைப் பற்றியே தெரியாது.ஆம்.அவர்கள் என் தந்தையின் ஒரே ஒரு தங்கை.நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த உறவுகள் ஓன்று சேர்ந்தாலும்.....பழைய நினைவுகளில் நான் எதுவுமில்லா அனாதையாய் நின்ற காட்சிகள் கண்ணில் தெரிகின்றன.அப்போது அரவணைக்க மறந்த மாமி,மாமா இன்று ஒன்றும் பேசாது அதிர்ந்து நிற்க.....நான் கேட்கிறேன்.மாமி...சீதனமா தங்கைக்கு எவ்வளவு கேட்கிறீங்க? என் வாயை மாமி அவசரமாகப் பொத்துகிறாள் என்ன மகன் ஸப்ரி இது.....சுல்பாவுக்கு .....சீதனமா? என் இரத்தமாச்சேப்பா...........மாமாவும் ஒத்து வருகிறார்.என் எதிர்காலக் கற்பனைகள் இனிதாக நிறைவேறும் என்ற நம்பிக்கையில் திருமண நாளைக் குறிக்கிறோம்.வாழ்த்து இதழ்கள் பரிமாறுவதற்காக வாசலுக்கு வருகிறேன். "நல் வாழ்த்து
                                                                                நான் சொல்வேன்
                                                                                நல்லபடி வாழ்கவென்று........."

என்ற பாடல் வானொலியில் ஒலிக்கிறது.அப்பாடலை ரசித்தவாறே மகிழ்ச்சியோடு விரைந்து நடக்கிறேன்.வீது மஞ்சள் வெயிலில் குளித்துக் கொண்டிருந்தது.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வாழ்கை மலர்கிறது..........!

டொக்........டொக்.........சத்தம் சிபாவுக்கு நாதமாக ஒலித்ததுக் கொண்டிருந்தது.அவள் மெதுவாக பின் ஹோல் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.அங்கே முற்றத்து வளவில் சியானும்,சில்மியும் வெட்மீட்டர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.அதிகமாக காற்றும் வீசுவதால் செட்டிக் கொக் பல திசைகளிலும் பறந்து விழுவதால் சியானுக்கு கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.கோபம் நிறைந்தவாறு பற்களை கடித்துக் கொண்டே பாய்ந்து ஓடி ஓடி அடிக்கிறான்.மெதுவாக அடியுங்கள் என்ற சத்தத்தில் சியான் திரும்பிப் பார்க்கிறான்.அங்கே சிபா அழகான புன்னைகையுடன் கதவின் மேல் கை வைத்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.ஓ...என்ன இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறீங்க விளையாடுங்களேன்.யார் வெற்றி பெறுகின்றீர்கள் என்று பார்ப்போம்.சிரித்தபடியே சொல்லிவிடுகின்றாள்."என்ன சொல்கின்றீங்க இவ பெரிய மத்தியஸ்தராட்டம்"நான் எதிலும் மத்தியஸ்தானே,நீங்கள் சியான்...என்று இன்னும் எதோ சொல்லப் போனவள்.சிபா எனும் அழைப்புக் கேட்டு சியானின் தாய் சில்மியாவிடம் விரைந்து சென்றாள்.சிபாவுக்கு பதின் ஆறு வயதிருக்கலாம்.வறுமையின் கொடூரப் பிடியில் சிக்கித் தவித்து தன் வயிற்றுப் பசியை போக்க கியாஸ் முதலாளியின் வீட்டில் பணிப்பெண்ணாக சுமார் பத்து வருடகாலமாக வேலை  பார்க்கிறாள்.அவளின் ஏழைத் தாய் இருந்து இருந்து இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை வந்து கியாஸ் முதலாளியிடம் நூறு,இருநூறு வாங்கிக் கொண்டு போவாள்.இதுதான் சிபாவின் சம்பளம்.அவள் வேளைக்கு வந்தபின் பிறந்தவள் தான் கியாஸ் முதலாளியின் மகள் சிறீன்.இப்போது அவசி கூட ஒரு ஆண்குழந்தைக்கு தாயாகிவிட்டாள்.ஆனால் சிபா...?கியாஸ் முதலாளியை அப்பா...என்றும் சிபாவை அண்டி என்றும் அக்குழந்தை செல்ல மொழியில் பேசும் போது சிபாவின் ஆசை அபிலாசைகள் கற்பனையில் தஞ்சமடையும்.நானும் ஒரு செல்வந்தரின் மகளாயிருந்தால் இந்த நிலைக்கு தானே இருப்பேன்....ம்.........ஏழையாகப் பிறந்ததால் தானே இப்படி..........?எல்லா பெண்களுக்கும் குமரிப் பருவத்தில் ஆசைகள் இருக்காதா? ஏழை சிபா ஆசையற்றவளா? உணர்ச்சியற்றவலா?கியாஸ் ஹாஜியாரின் மகளது நிலைமை கண்டு பேறு மூச்சுக்கள் விடுவாள்.பெண்ணாகப் பிறந்தாலும் ஏழையாக என்னைப்போல் யாருமே பிறக்ககூடாது என்று அவளுள்ளம் பிரார்த்தனை புரியும்.அதே நேரம் சீதனத்தை நினைத்தாள்.அவளுள்ளம் மெழுகு போல், உருகி வடியும்.இந்த  நிலையில் அவளது  வாழ்கையில் கூட விரக்தியான மனோபாவமே ஏற்பட்டது.தற்போது நான் சியானின் பாசம் சிபாவின் பக்கம் திரும்பி அவளுள்ளத்தில் இன்பத்தை மாற்றி தூய அன்பின் உறவை ஏற்படுத்திவிட்டது.அவனின் பதவி அவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது."சிபா, சிபா " என்ற சியானின்  குரலைக் கேட்ட சிபா,என்னங்க அழைத்தீர்களா?என புன்முறுவலுடன் கேட்டாள்.ஆம்,"கொஞ்சம் தண்ணீர் கொண்டு தாங்கோ "என்றான்.தண்ணீரை வாங்கி குடுத்து விட்டு சியான் வழமை போல் ஒப்பிஸுக்கு போய் விட்டார்.சிபா குசினிக்குள் வேலை  செய்து கொண்டிருந்தாள்.'எய் சிவா இங்கு வாடி'நான் அடுத்த வீட்டு மாமிக்கு சொன்னேன் அவ இரவைக்கு இங்கு வந்து உமக்குத் துணையாக இருப்பா.சியான் மகன் வந்தால் அவரையும் மாமா வீட்டுக்கு கட்டாயமாக வரச் சொல்லு நாங்க போய் வருவீனம்.வீட்டில் இருங்க மகள் என்று சொல்லிவிட்டு காரின் கதவ மூடினாள்.கார்,முதலாளியையும்,மனைவி,மக்களை ஏற்றிக் கொண்டு விரைந்து சென்றது.நேரம் இரவு 09 மணி,இன்னும் சியான் வீட்டுக்கு வரவில்லை.இப்படி தாமதிப்பதில்லையே.சிபா கற்பனை செய்த படி கதவருகில் அமர்ந்து கொண்டு தன் பார்வை செல்லும் வரை சியானின் வரவை எதிர்ப்பார்த்திருந்தாள்.அடுத்த வீட்டு மாமியோ கும்பகர்ணன் போல் கொரட்டை விட்டு நிம்மதியாக அருகில் இருந்த வெட்டில் படுத்துக் கொண்டார்.சியான் காரை கராஜில் நிறுத்தி விட்டு மெதுவாகப் போய் சிபா என்று அழைத்தான்.ஓ....என்ன இவ்வளவு தாமதம் என்றபடி எழுந்து நின்றாள்.இன்று தாமதிக்க வேண்டிய நிலை வந்து விட்டது என்று அன்புடனே கூறிய படி சிபா கொஞ்சம் வெளியே வாங்களேன் என்றான் .அவள் ஏன்.....?என்று கேட்க பயப்படாதீங்க சிபா சற்று கராஜிக்கிட்ட வாங்களேன் என்று பரிதாபமாக அழைத்தான் .அவளும் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்றாள்."சிபா நான் இன்று உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்.என்னுடன் வரத் தயார் தானே......உங்களை கடைசி வரையும் என்னால் காப்பாற்ற முடியும் சிபா வாங்க நாம் போய் முறைப் படி திருமணம் செய்து கொள்வோம்"என்றான் சியான்."சியான்,உங்கள கெஞ்சிக் கேட்கின்றேன்.உம்மா உங்களை வரச் சொன்னார்.போயிடுங்கோ அவள் கெஞ்சுகிறாள்.உங்களுக்கு கொடுத்த சீதனங்களுடன் மாமா மகளைத் திருமணம் பேசித்தானே போயுள்ளார்.இந்த ஏழையை நீங்க முடித்தாள் பின்னுக்கு வீண் பழிகள் கோன்றாலும் சியான் போங்க....சிபா இங்கு பாருங்க;நான் பணம் அந்தஸ்த்தை நாட வில்லை.உங்களைப் போன்ற ஏழையைத்தான்  நான் விரும்புகின்றேன்.எனது பெற்றோர் பணத்தோடு தன் பணத்தை சேர்க்கப் பார்ப்பார்கள் இப் பணம் எல்லாம் நிலையற்றது.என் பெற்றோர் சீதனப் பேய்கள்.நீங்க என்னுடன் வர வேண்டும்.உங்களைத் திருமணம் செய்வதன் மூலம் தான் என் பெற்றோரது வரதட்சனை கொள்கைகளை முறியடிக்க முடியும் என்றான் சியான்.இரவோடு இரவாக சியான் சிபாவை அழைத்துச் சென்று மார்க்கப்படி திருமணம் செய்து கொண்டான்.திருமணம் பேசி சென்ற கியாஸ் தம்பதிகள் வீடு வந்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.கியாஸ் முதலாளி மதம் பிடித்த யானையைப் போல் இங்கும் அங்குமாக நடையின்று கொண்டிருந்தார்.முதலாளியின் மனைவியோ வாய்க்கு வந்த படி உளறுகின்றாள்.சீ எம் வீட்டு வேலைக்காரியை மனைவியாக்கி விட்டானே.....எமது பணம் என்ன...? நினைத்து நினைத்து கவலை கொண்டாள்.ஊர் எங்கும் சியானின் புகழ் பரவி விட்டது.ஏழைக் கன்னியை கரை சேர்த்து விட்டார்.சிபாவுக்கு நிம்மதியான வாழ்க்கையை சியான் கொடுத்து மனமகிழவைத்த தியாகியாகி விட்டார். இப்படி பல புகழ்கள்.சிபாவுக்கு சொல்லொணா மகிழ்ச்சி எனது வாழ்க்கையின் பெரிய பிரச்சினையொன்று இலேசாக தீர்ந்து விட்டது என்று,சியான்,சிபாவை கரம் பிடித்த வண்ணம் புது வாழ்வை நோக்கிய வாரே மலர்ந்து வதனத்துடன் இல்லற வாழ்க்கையில் இரு மலராகி விட்டார்கள்.ஆம்;இனி அவளுக்கு வறுமைக்கே இங்கு இடமில்லை.இவன் தான் உண்மையான உத்தமன்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வாடிய ஓர் மலையகச் செடி மலர்ந்தது....

தேயிலைச் செடிகளின் பக்கத்தில் அந்தப் பெண்கள் குந்திக் கொண்டிருந்தார்கள்.கூடையைத் தோளிலே வைத்துக் கொண்டு முனியம்மா தீடிரென எழுந்தாள்.குடத்தை கீழே இறங்கி வைத்துக் கொண்டு முனியம்மாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அன்னம்மா,இவள் எழுந்து நிற்பதைப் பார்த்து குடத்தை  இடையில் வைத்தவளாய் தானும் எழுந்து கொண்டாள்.வானின் நீலவர்ணத்தைக் கண்டு பொறாமைப் பட்டாற் போல ஒரு கருமுகிற் கூட்டம் திரண்டு வந்து கொண்டிருந்தது.இதைப் பார்த்த முனியம்மாவுக்கு நெஞ்சு திக்கென்றிருந்தது.வீட்டு நினைவு வரவே அவள் அன்னம்மாவுடன் கதைப்பதை நிறுத்தி விட்டு எழுந்து கொண்டாள்.கடவுளே பெரிய மழை வரப்போகிறதே;என் பிள்ளைகளை நீதான் காப்பாத்தனும் என்று கலங்கிய கண்களுடன் தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.முன்னே தோட்டத்துரையின் பெரிய பங்காள பளிச்சிட்டது அதைப் பார்த்ததும் பேறு மூச்செறிந்த முனியம்மா வெறும் மண் குடிசை கூட இருந்தும் தமக்கு அவை உருப்படியாக இல்லாமல் இருக்கிறதே என்று ஏங்கினாள்.இந்த மழை வந்தாள் வீடு வெள்ளமாய்ப் போகும் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக வா;அன்னம் போகலாம் என்று அழைத்தாள்.முனியம்மா;நீ பிள்ளைகளை நினைத்துக் கவலைப்படுகிறாயா?இந்த லயன்களில் எல்லாக் குடும்பமும் இந்த வர்ணபகவானின் அருளைப் பெறத்தான் வேண்டும்.மழை வந்தாள் நீ மட்டுமா உன் பிள்ளைகள் மட்டுமா?எத்தனை ஓட்டைகள் குடிசைகள்?பெரு மூச்சு விட்டாள் அன்னம்மா: நான் கூட தொழில் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தோட்டத்தில் ஒரு கூலி வேலைக்காக எத்தனை துயரப்பட்டிருந்தேன். நாம் ஏழைகள் தானே முனியம்மா என்று ஆறுதல்படுத்தி நடந்து கொண்டிருந்தாள்.இல்ல அன்னம் வீட்டில பிள்ளைகள் பட்டினி அதோட மழையும் வந்து முடிக்க முடியாமல் முனியம்மாவின் குரல் தள தளக்க கண்களும் கலங்கியது அன்னம்மாவுக்கு மனதை வேதனை கவ்வியது தன்னைப் போல ஒரு ஏழை படும் பாட்டை அவளால் உணர முடிந்தது.தன்னருகே முந்தானையால் கண்களைத் துடைத்த படி வந்த முனியம்மாவை தேற்றினாள்; முனியம்மாவின் கண்ணீரைக் கண்டோ என்னவோ கூடி வந்த கருமுகில்களைக் காற்று கலைத்து வானத்தைப் பழையபடி நீல நிறமாக்கிக் கொண்டிருந்தது.மழை சாடையான தூறலுடன் நின்று விட்ட மகிழ்ச்சியில்  இருவரும் தோட்டத்தில் இருந்த ஒத்தாப்பில் அமர்ந்தனர்.அப்போது தான் ஒரு குடிகாரன் மிக்க போதையில் வெறியோடு தள்ளாடித் தள்ளாடிக் கொண்டே வந்தான்.அன்னம்மாவினால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.அதோ பார்த்தியா அன்னம் அவன் தான் என் புருஷன் என்று முனியம்மா சொல்லவும் அவளால் இவளின் பரிதாபத்தைப் பார்க்கவே முடியவில்லை.தினமும் இப்படியே இவன் குடிச்சிட்டு வாரான்.கொழந்தைகளுக்கு எதுவுமே கொடுக்க அஞ்சு காசுக்கு வழியில்லாம நேத்து ராத்திரிக்கு முதல் ராத்திரி பக்கத்து வீட்டு பார்வதிகிட்ட பத்து ரூபா கடனைக் கேட்டேன்.அவ புருஷன் நேத்து அத வாங்கிட்டு வாடின்று பார்வதியை அடிச்சிருக்கான்.நான் என்ன பண்ணுவேன்னு தெரியல்லயே இவன் ஒரு புருசனா என்று புலம்பினாள் முனியம்மா.துரையின் தோட்டத்தில் எதாவது வேலை கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருவரும் வெகு நேரமாக தோட்டத்தில் குந்திப் பேசிக் கொண்டிருந்தனர்.நீண்ட நேரங்களுக்குப் பின்னே கங்காணி வந்து அவர்களை அழைத்தான்.மிகவும் மகிழ்ச்சியுடன் ஓடினால் முனியம்மா.அவளைத் தொடர்ந்தாள் அன்னம்மா.கங்காணி சொல்லிய அந்த வேலையைச் செய்யத் தயங்கினார்கள்  இருவரும் இது எவ்வளவு சிரமம்.ஒரு மணித்தியாலத்துக்குள் ஆண்களாலேயே செய்ய முடியாத வேலையை நாம் எப்படிச் செய்வது?யோசித்தபடியே 'என்ன கங்காணி......ஆண்கள் செய்யும் இந்த வேலையை அதுவும் ஒரு மணித்தியாலத்திற்குள் எப்படிங்க செய்வோம்?அவர்கள் கேட்டனர்.உண்மையிலே கங்காணி சொன்னா வேலை மிகவும் கஷ்டமானது தான்.அவனின் பங்களாவைக் கழுவி சாமான்களெல்லாம் ஒரு ரூமிற்குள் வைத்துவிட்டு விரைவில் தண்ணீரின்றிக் காய்வதற்கு வசதியாக நிலத்தைத் துடைக்க வேண்டும்.'ம்.......அப்பாடி'பெருமூச்சுவிட்டாள் அன்னம்மா.முனியம்மாவுக்கு பார்வதியிடம் வாங்கிய கடனையாவது கொடுக்கலாமே என்கின்ற ஆவல்.கணக்கப்பிள்ளை தங்கராஜா விரைந்து வந்தவர் கங்காணியை  பார்த்து வேறு ஆண்களை இந்த வேலைக்கு அனுப்பி விட்டு இந்தப் பெண்கள் இருவரையும் புதிய மலைக்கு அனுப்பு கொழுந்துல நேர ரொம்ப மோசம்.பிச்சி புடுங்கி உள்ளது என்றார்.இருவருக்கும் பாரச்சுமை கழிந்தது.விரைவாக கொழுந்துகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார்கள்.மூன்று மணிக்குத் தொடங்கிய வேலைகள் ஐந்து  மணியைத் தாண்டியும் ஒரு பத்து நிமிஷத்தையும் சேர்த்துக் கொண்டது.தலை கனக்கக் கொழுந்து கொண்டு வந்து இருவரும் கொட்டினார்கள்.குறைந்தது முப்பது கிலோவாவது இருக்கும்."இருந்தா துண்டு;கனக்கப் பிள்ளையிடம் கொடுத்து சம்பளத்தை வாங்கிக் கொண்டுபோங்கள் என்றார் கங்காணி.சம்பளப் பணம் கிடைத்தது.ஆளுக்கு முப்பது ரூபாய்."இது என்ன அநியாயம் கணக்குப் பிள்ளை?"என்று பதறினாள் முனியம்மா .என்ன ஒருவருக்கு பத்து கிலோ அவளுக்கு எல்லாம் இருவது கிலோ கூறியபடி கணக்குப்பிள்ளை என்றார்.வேலைக்கு ஏற்ற பணம் தந்திருக்கு என்று போய்விட்டார்.அவரைப் பின் தொடர்ந்து காலில் விழாத குறையாய் இன்னும் பத்து பத்து ரூபாய் கொடுக்கும்  படியும் ,நிறை சரியாக நிறுத்தி தராசைப் பார்க்காமல் துண்டு கங்காணி தந்த தாகவும் இருவரும் வாதாடினார்கள்.......இல்லை கெஞ்சினர்.கங்காணி மசியவில்லை. முனியம்மாவின் கண்கள் கலங்கின.அப்பணத்தைப் பட்ட கடன் கொடுபதா? சாப்பிடுவதா என்று அவளால் நிர்ணயிக்க முடியவில்லை.அன்னம்மாவின் கணவனும் உழைப்பதனால் அவளுக்குக் குடும்பச் செலவு தெரியவில்லை என்றாலும் அவளும் வறுமையைச் சந்திப்பவள் தான்.ஆனாலும் தன் தோழி முனியம்மா படும் துயரத்தைக் காணச் சகியால் தனக்குக் கிடைத்த பணத்தையும் கொடுத்து "முனியம்மா,நீ இதைப் எப்போதாவது திருப்பித்தா.........ஏழைகளை ஏழைகளால்தானே புரிய முடியும்.உன் குழந்தைகளுக்கு சமைச்சிப் போடு" என்று பெரிய மனதோடு முப்பது ரூபாவைக் கொடுத்தாள்.முனியம்மாவினால் அந்த உதவியை மறக்க முடியவில்லை.நன்றி கலந்த பார்வையுடன் அன்னம்மாவைப் பார்த்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினாள்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

எரிந்து விழுந்த மனசு...!!!

"ஐயோ...வாப்பா...என்ன தனியா விட்டுட்டுப் போகாதீங்களே....வாப்பா....வாப்பா...நானும் ஒங்களோட வாரன் வாப்பா....போகாதீங்கோ வாப்பா...." ஸமீனாவின்  அலறல் அங்கிருந்தோரை கலங்கச் செய்தது.சிறு வயதிலையே உம்மாவைப் பரிகொடுத்த அவளுக்கு வாப்பாவின் திடீர் மறைவை தாங்கவோ தாளவோ முடியவில்லை;பொங்கி வந்த துயரவெள்ளத்திற்கு அணை போட முடியாமல் கதறிக் கதறி அழுதாள்.அப்போ அவளது யாரோ ஆறுதலாகத் தடவியதைக் கண்டு கண்ணீர் மல்க நிமிர்ந்தாள்.நீரோடு கூடிய மங்களான பார்வையில் பக்கத்து வீட்டு நிஸாம் ஹாஜியாரும்,மனைவி பஸ்லியாவும் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களைக் கண்டதும் அவளது ஓலம் மேலும் பெரிதாய் வெடித்தது."மாமி....மாமி....நான்...நான்...அநாதையாகப் போயிட்டன் மாமி...." அவளது உதடுகள் துடித்தன,சொற்கள் வெளியே வர முடியாமல் தடுமாறின."அப்படிச் சொல்லாதீங்க ஸமீனா....ஒங்கலப் பார்த்துக் கொள்ள நாங்க இருக்கிறோம் ....கவலய விடுங்க....ஒங்கல எங்கட சொந்த மகளப் போல பார்த்துக்கிறது எங்களோட பொறுப்பு...."அடுத்த வீட்டு பஸ்லியா மாமியின் பேச்சு அவள் உடம்பை சிலிர்க்க வைத்தது;மனதை நெகிழவைத்தது;அப்படியே அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குழுங்கத் தொடங்கினாள் ஸமீனா.ஸமீனாவின் மாமி தான் ஹஸன் முதலாளி;தனது சகோதரியான ஸமீனாவை திருமணம் செய்து வைக்கும் போது வீடுகட்டித் தருவதாக வாக்களித்தே அதனை முடித்து வைத்தார்.அதுவரையில் புதுமணத் தம்பதிகளுக்கு தனது வீட்டிலேயே தங்கலாம் என சொல்லி விட்டார்.கடவுள் நினைத்தாலும் பூசாரி இடம் கொடுகாதது போல அவரது எண்ணத்தின் குறுக்கே சீனப் பெறும் சுவர் போல நின்றாள் மனைவி நஸூஹா . "ஒங்களுக்கு என்ன புடிச்சிருக்கு.....போயும் ...போயும் ....எங்கேயோ  போகிற பஞ்சப் பிராணிகள் எங்கட வீட்டுல நிறுத்திறதா.....ஒங்களுக்கு என்ன மூளகீள குழம்பிட்டுதா....இது எங்க வாப்பா கட்டித் தந்த வீடு....நீங்க செய்ற கடை எங்கட வாப்பாட கட...இந்த சொத்து சுகம் எல்லாம் நான் கொண்டு வந்தது.ஒங்கட தரித்திரம் புடிச்ச குடும்பத்துக்கு அனுபவிக்க எங்கட சொத்தா பழி.....இந்த நிமிசமே அவங்க வெளியேறணும்...இல்ல நான் ஏன்டா புள்ளைங்களோட வெளியே போயிடுவேன்...."ஹஸன் முதலாளி ஆடிப் போய்விட்டார்.மனைவிக்குப் பயந்த பொட்டிப்பாம்பு அவர்.எதிர்த்தா? பேச முடியும்.எதோ கெஞ்சிக் கூத்தாடித்தான் அவளைப் பணிய வைக்க முடிந்தது.என்றாலும் அவரது மனைவியின் போக்கில் எந்த வித மாற்றமோ தோற்றமோ இல்லை.ஸமீனாவின் உம்மாவை குற்றம் காண்பதே அவளது பொழுது போக்காகிவிட்டது.இருந்தால் கதை எழுந்தால் உதை என்கிறது போல அவளது காட்டு தர்பார் வீட்டுக்குள்ளே வீர நடை போட்டது.பாவம்,ஸமீனா வாயில்லாப் பூச்சு.எதையும் தாங்கிக் கொண்டாள்;அடங்கிக் கொண்டு தனக்குள்ளேயே மாய்ந்து போனாள்.இதற்கிடையில் ஸமீனா பிறந்ததும் நஸூஹாவின் அட்டகாசம் எல்லை மீறியது;குத்தல் வார்த்தைகள் அமெரிக்கன் ஏவு கணைபோல அவள் மென் நெஞ்சத்தைத் துளைத்தது.பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல் ஸமீனாவுக்குக் கூட எவ்வளவோ அநியாயம் செய்தாள்.குழந்தை கூடுதலாக சாப்பிட்டால்-குடித்தால் கூட முழு சொத்தையும் விழுங்கி ஏப்பம் விடுவதாகக் கத்தினாள்;சண்டைபோட்டாள்.இதை எண்ணி எண்ணி உருக்குலைந்து நடைபிணமாகிப் போனவள் ஸமீனா பத்து வயதாக இருக்கும் போதே மாரடைப்பாள் பட்டென்று போய் விட்டாள்.அப்புறம்
 ஸமீனாவையும் தந்தையையும் வீட்டை விட்டே துரத்தி விட்டாள் நஸூஹா.அங்கிருந்து வெளியேறிய ஸமீனாவின் தந்தை நிஸாம் ஹாஜியாரின் பக்கத்து வீட்டிற்கு வந்து குடியேறினர்.ஸமீனாவின் மழலைப் பேச்சு குழந்தை இல்லாத அவர்களைக் கிறங்கச்  செய்தது.ஸமீனாவின் அதிக பொழுது நிஸாம் ஹாஜியார் வீட்டிலேயே கழிந்தது.மிக சீக்கரத்திலேயே இரு குடும்பமும் நெருக்கமாகிவிட்டன.ஸமீனா உயர்தரப் பரீட்சை எல்லாம் முடிந்து கவலைகளை மறைந்திருந்த போது தான் தந்தையின் திடீர் மறைவு அவளை இடியாகத் தாக்க,ஆடிக்காற்றில் சிக்குண்ட துரும்பாய் மாறினாள்.நல்ல காலம் - திசை தெரியாது தவித்த அந்தத் துரும்பை நிஸாம் ஹாஜியாரும் - மனைவியும் பொறுப்பேற்று விட்டார்கள்.க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் பாடசாலை அறிவுப் பலகையில் தொங்கின.ஸமீனா விஞ்ஞானத் துறையில் மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தாள்.நாட்காட்டி சில நாட்களை புறங்காட்டி ஓடச் செய்ய பல்கலைக்கழகம் புகும் நாளும் நெருங்கி விட்டது.பல்கலைக்கழகச் சூழல் அவள் புருவங்களை முடிச்சுப்போட வைத்தன.அங்கே எல்லாமே அதிசயம் -வியப்பு-மலைப்பு! ஆண் பெண் வித்தியாசமின்றி மாணவர்கள் பழகுவதைக் கண்டு கூசிப் போனாள்."ரெகிங்" என்ற பெயரில் நடைபெறும் அநாகரிகச் செயலை வெறுத்தாள்.தனது கிராமச்  சூழலுடன் ஒப்பிடும் போது வாஸிடி வாழ்க்கை அவளுக்கு விநோதமாகவே இருந்தது.ஆண்களை ஏறெடுத்துப் பார்க்கவே கூசும் அவள் சில ஆண்களின் முரட்டுப் பார்வை கண்டு தடுமாறிப் போனாள்.அவர்களின் கிண்டல்களில் நொந்து அவள் உள்ளம் மண்டியிட்டது.ச்சே....இது தானா பல்கலைக்கழகம்.......இதுவா படிப்பு என்று முதல் இரண்டு மாதமும் மனத்துள் அழுந்திப் போனாள்.ஆனால்,நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவர்களின் தூய உள்ளம் அவளுக்குப் புரிந்து விட்டது.தங்களுக்குள் ஏதும் நடந்து விட்டால் ஒற்றுமையாகின்ற அந்த வேகம் - தனது சகாவுக்காக எதையும் செய்யத்துணிகின்ற தீவிரம் - அநியாயங்களை அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து எழுகின்ற வீரம் - பெண்களை சமமாக மதித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர செய்கின்ற ஆர்வம் - தான் இதுவரை அந்த நல்ல உள்ளங்களை நுனிப்புல் பாங்கில் அளந்த அந்த செயலுக்காக அவள் அடிக்கடி தனக்குள் வருந்தினாள்.இப்போது அவர்களுடன் சகஜமாகப் பழகினாள்அந்த வட்டத்துக்குள் இந்தத் துளி சங்கமமாகிவிட்டது.அன்று விரிவுரை இல்லாததினால் வாசிக சாலையில் உட்கார்ந்து மூ.மேத்தாவின் "என்னுடைய மோதிரங்களைக் "குடைந்து கொண்டிருந்தாள் ஸமீனா.அருகே நிழலாடியது.நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் சூரியப் பிரகாசம்.எதிரே நவ்ஷாத் நின்று கொண்டிருந்தான்.பல்கலைக்கழகத்தில் 'ஹீரோ'வாக பவனி வந்தவன்.சுருள் சுருளான கம்பிவளையல் போன்ற கேசங்கள் நெற்றியில் புரண்டு அவனுக்கு தனியான அழகை ஊட்டியது.அவனது நாகரிகமான உடை நடைப் போக்குகளில் தனிக்கவர்ச்சி தெரிந்தது.ஆங்கிலம் அவனது நாவில் கொஞ்சி விளையாடியது.சகல துறைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தான்.கலா மன்றங்களில் அவன் பேச்சில் "சேர்ச்சில்"மறைந்து நின்றார்.அவனது குரலில் பாலசுப்ரமணியம் நினைவுக்கு வந்தார்.அவனது கட்டுடல் யாரோ ஒரு ஹிந்திக் கதா நாயகனை மனதுக்குள் எழுப்பி நிற்கும்.பல்கலைக்கழகத்தின் சங்கப்பலகை மாணவர்களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் சிங்கப் பலகை! மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கை கொடுக்கும் சுந்தரப் பலகை. ஒரு தடவை நவ்ஷாத்"பதில் தருவாயா"என்ற தலைப்பில் ஓர் உணர்ச்சி பூர்வமான புதுக் கவிதையை எழுதி ஒட்டி விட்டான். அதைக் கண்ணுற்ற ஸமீனாவும் வேடிக்கையாக "இதோ பதில்" என்ற தலைப்பில் மரபுக்கவிதையை போட்டு விட்டாள்.அந்தப் பதில் கவிதையின் மணிப்போன்ற நயமான கவிதை வரிகள் நவ்ஷாதை வெகுவாக ஈர்த்து விட்டது.இப்படியாக சங்கப்பலகையில் மோதியவர்கள் தங்கள் உள்ளத்துக்குள்ளும் மோதிக் கொள்ள அவர்களுக்கிடையே பேரும் நெருக்கம் வந்துவிட்டது.ஸமீனாவை சந்திக்க வரும் நிஸாம் ஹாஜியாருக்கும் விஷயம் சொல்லமலேயே புரிந்துவிட்டது. ஸமீனா போன்ற அனாதைகளுக்கு நவ்ஷாத் போன்றோரின் பிணைப்பு மிகப் பொருத்தமான தென்றே நினைத்தார்.தனது மனதிலுள்ள நோக்கத்தை நவ்ஷாதிடம் சொன்னதும் அவன் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டான்."அங்கள்...நான் யாருமற்ற அநாதை....எனது தாயின் அயராத முயற்சியால தான் நான் இந்த நிலைக்கு வந்தான்...எனது உயர்ச்சியைக் கூட பார்க்க எனது உம்மாவுக்கு கொடுத்து வைக்கல்ல......அதோட எனக்கென்று சொந்தமா ஒரு வீடு கூட இல்ல .....இப்படியான நிலைமையில் பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளையான ஸமீனாவை நான் கல்யாணம் கட்டுறதா நெனச்சிக் கூட பார்க்க  முடியாது.நான் சொந்தமாக உழைச்சி முன்னேறின பிறகு தான் ஸமீனாவ கட்ட நெனச்சன்......" மனத்துள் உள்ளதை அப்படியே கொட்டி விட்டான் நவ்ஷாத்.நிஸாம் ஹாஜியார் அவனது நல்ல உள்ளத்தை பார்த்து சிலிர்த்து போனார்."நவ்ஷாத் ஸமீனாவும் உங்களப் போல அநாததான்.....நான் அவட வாப்பா இல்ல...என்றாலும் என்னோட சொந்த மகள் மாதிரி ஸமீனாவ பார்த்துவாரன்.......என்னோட முழுச் சொத்தும் அவளுக்குத் தான்....ஒன்கிட்ட சொத்து இல்லேன்னு கவலப்படல்ல....அழியாச் சொத்து கல்வி இருக்கு தானே....அது போதும்...அதோட நீங்க டொக்டராக வரப்போறீங்க.....அது ஸமீனாவோட அதிஷ்டம்....உங்கட படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்த நடாத்தி வைக்கிறன்.....கவலப்படாதீங்க....."சொல்லி விட்டு காரில் ஏறினார் நிஸாம் ஹாஜியாரை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தான் நவ்ஷாத். ."என்ன...ஒரேயடியா....யோசனைல மூழ்கிப் போயிட்டீங்க......என்ன விஷயம்..."சிந்தனை களைந்து நிமிர்ந்த நவ்ஷாத் ஸமீனாவைப் பார்த்து கனிவோடு சிரித்தான்.அவளும் சிரித்தாள்.திருமணம் முடிந்து ஸமீனாவும் நவ்ஷாதும் ஒரே ஆஸ்பத்திரியில் கடமை புரிந்தனர்.வாரத்தில் ஒரு முறை அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்து வந்தனர்.அதைப் பெரும் பாக்கியமென நினைத்தனர்.அன்று ஸமீனா அரைநாள் விடுப்பில் வீட்டுக்குப் போய் விட்டாள்.நவ்ஷாத் மாத்திரம் தனியே அகதி முகாம்களை கவனிக்கப் போனான்.அப்போது ஒரு பெண்மணி அவரைத் தொடர்ந்து வந்து "தூர...அண்மையில் நடந்த கலவரத்தில் என்னோட குடும்பத்தில் இருந்த அனைவருமே பலியாகிட்டாங்க.....நான் மட்டும் தான் மிச்சம்....நான் ரொம்ப செல்வச் செழிப்போட கொடிகட்டிப் பறந்தவ.....இப்போ ஒரு கொடி கட்டக்கூட வக்கில்லாம இருக்கிறன் தொர.....ஒங்கட முகத்தப்பார்த்தா ரொன்ப நல்லவர் போல தெரியுது.....எனக்குத் தெரியுது....எனக்குத் தனிய  இந்த அகதி முகாம்ல இருக்க பிடிக்கல்ல....ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்....தயவு செஞ்சி என்னை ஒங்கட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கோ...ஒங்க வீட்டு வேலைக் காரியாக நான் கடைசி வரையில இருக்கிறன்...."நவ்ஷாத் ஒரு கணம் வீட்டு நிலைமையை யோசித்துப் பார்த்தார். ஸமீனாவுக்கு இப்போது வயிற்ருக்குள் ஆறுமாதம்;கஷ்டப்பட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது.அவளுக்கு துணையாக இருக்கட்டுமே என்று அந்த பெண்மணியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்.காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்மணியைக் கண்டதும் ஸமீனா திகைத்துப் போய் நின்றாள்.எப்போதோ கண்ட அறிமுகமான முகம்;தான் பத்து வயதாக இருக்கும் போது வள்..வள்....என்று தன்மீது எரிந்து விழுந்த அந்த முகத்தை இலேசில் மறக்க முடியுமா என்ன? சற்றே கண்ணயர்ந்து தூங்கிவிட்டால் போதும் அப்படியே ஒரு வாளித் தண்ணீரை முகத்தில் அடித்து"அடியேய்.....தருதல பிடிச்சவளே....தண்டச் சோறு தின்னவா இங்கு நிக்குறே.....எழும்புடி மூதேவி...."என்று எரிமலையைக் கக்கிய அந்தப் பிசாசு முகத்தை மறக்கவா முடியும்...?அது தான் மனத்திரையில் எப்போதோ பதிந்து விட்ட முகப்படமாச்சே..."நீங்க...நீங்க...நஸூஹா மாமி தானே...."ஸமீனாவின் வைச் சொல் தடுமாறியது.அந்தப் பெண்மணி அதிர்ந்து போனாள்.நன்றாய் வளர்ந்து தங்க விக்கிரகம் போல தள தள வென்று இருந்த ஸமீனாவை அவளால் அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை."மாமி....மாமி...என்னைத் தெரியலியா...நான்...நான்...ஸமீனா...."அந்தப் பெண்மணி அப்படியே ஓடிவந்து ஸமீனாவைக் கட்டிக் கொண்டாள்.அவள் உடல் குலுங்க,கைகள் வெடவெடத்தன,நாத் தழுதழுத்தது."ஸமீனா.....என்னை மன்னிச்சிடுங்க.....மன்னிச்சிடுங்க மக.....நான் ஒங்க குடும்பத்துக்கு எவ்வளவோ துரோகம் செஞ்சன்....உங்க பிஞ்சு மனச புரியாமல் நஞ்சுத் தனமாக நடந்துகிட்டன்.....அந்த அநியாயம் தான் இப்போ அனுபவிக்கிறன்....உங்கள எல்லாம் அகதிகளைப் போல விரட்டினன்.....அல்லாஹ் இப்போ என்னையே அகதியாகிட்டான்....என்னை மன்னிச்சிடுங்க...."ஸமீனாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.ஸமீனாவுக்கும் கண்கள் புடைந்தன.அந்தக் காட்சியை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் டொக்டர் நவ்ஷாத்....

திங்கள், 18 ஏப்ரல், 2011

இணையந்த இதயங்கள்.....

"வாழ்கையில் துன்பம் வருவது இயற்கை அதை நான் மறுக்க வில்லை.ஆனால் தொடர்ந்து துன்பம் தான் வாழ்க்கையாகி விட்டாள்...வாழ்வதில் என்னடி அர்த்தம்....?"
பரீனா,வாழ்க்கை பூராகவும் நீ துன்பத்தைத் தான் அனுவிக்க வேண்டுமென்று இறைவன் தலையில் எழுதியிருந்தால் ,அதை நானோ,நீயோ தடுத்து நிறுத்த முடியுமா என்ன? "ஓடும் நதி வழியே ஒருத்தி மட்டும் விதி வழியே" என்று கவிஞர் கண்ணதாசன் எழுத எண்ணினாராம்.ஆமாம் விதி வழி என்ற ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது.அதனை 'இறைவழி' என்று அழைத்தாலும் பிழை இல்லை என்றே எண்ணுகிறேன்.எனவே எந்த நேரத்தில் எது வந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தாண்டி வாழ்க்கை.ஆகவே நாம் தான் நாம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்."அப்போ,கால மெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு அவரோடு வாழ்வதற்காக  என்னை அவரையே  திருமணம் செய்யும் படி சொல்கியாய்"...?பரீனா பரிதாபமாகக் கேட்டாள்."என் உடலில் என் உயிர் உள்ளவரை என்னிதயத்திலிருந்து எந்தச் சக்தியாலும் உன்னைப் பிரிக்கவே முடியாது....உன்னைத் தவிர வேறு ஓர்  ஆடவனின் நிழல் கூட என்னில்படுவதை ஒரு போதுமே விரும்பமாட்டேன் என்று,அன்று ஞாயிற்றுக் கிழமை பகலைக்கழக கேட்போர் ஹோல் மண்டபத்தில் வைத்து நஜீமிடம் சொன்னவற்றை இன்று கனவாக நினைத்து  மறந்து போய் பேசுகின்றாய் என்று நினைக்கின்றேன்,அன்று இதயத்திலே பாசம் படரும் போது சத்திய வாக்கை பனித் துளியாக தூறினாயே நட்பு மலர் காதலாக செழித்து இல்லற வாழ்வில் நறுமணம் நல்லறமாக வீசவேண்டுமென்று  எதிர் பார்த்தாயே ஆனால் அது இன்று உனக்கெங்கே ஞாபகத்துக்குவரப் போகுது  எல்லாமே காற்றோடு காற்றாக பறந்துவிட்ட தூரியாகிவிடாதே.இர்பானா கிண்டலாக பேசினாள்."இர்பானா,என் என் நிலைமையை உணராமல் ஏண்டி இப்படியெல்லாம் பேசுகின்றாய்.நீ தான் பரீனா உன் நிலைமையை உணராமல் மூடத்தனமாக நிதானமிழந்து பேசுகிறாயா?" "பரீனா,கொஞ்சம் சிந்தித்துப்பார்.நஜீம் வசதியாக இருந்த போது அவருக்கு காதலியாக இருந்து விட்டு  இப்போ நீ ஓர் டாக்டராக மாறிவிட்டாய் என்பதற்காக அவரை விட்டு விலகி வாழ்கிறாயே மரம் விட்டு மரம் தாவும் குரங்குக்கும் உனக்கும் என்னடி வித்தியாசம்.இர்பானா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பரீனாவின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்தது.பலகலைக் கழக படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளத் துடியாத் துடித்தவர்களை,பெற்றோர் பிரித்து வைத்தார்கள்.பரீனா,பெற்றோரின் கட்டுப் பாட்டுக்குளிருந்து மட்டக்களப்பு  ஆதார வைத்தியசாலையில் டாக்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள்.நஜீம் எதிர்புகளுக்கிடையில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு தனிமையில் வாழத் தொடங்கினான்.ஆமாம்;நஜீம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தான்.பரீனா நஜீம் இருவருக்கிடையில் கடிதத் தொடர்புகளுமின்றி ஒருவர் நினைவில் ஒருவர் வாழத் தொடங்கினார்கள். இன்பமே நிறைந்திருந்த அந்த இளஞ்ஜோடிகளின் இதயத்தில் திடீரென்று ஒரு நாள்,துன்பம் தடவிப் பார்த்தது.நஜீம் பரீனாவின் தற்காலிகப் பிரிவு தாங்கமுடியாமல் அல்சரா புகைப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.இதன் விளைவு வயிற்றில் புண்களை உருவாக்கியது.திரும்பத் திரும்ப புகைத்ததால் அல்சராக் கூடி கடுமையாக பாதிக்கப்பட்டான். இதனால் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நஜீமை அவனது பெற்றோர் உடனடியாக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தார்கள்.பரிசோதனை செய்வதற்காக வாட் நோக்கி வந்த பரீனா நஜீமின் நிலைமையை அறிந்து மனவேதனைப்பட்டாள் பனித் துளிகளைப் போல் கண்ணீரை தாவினால். நண்பி என்ற முறையில்,இர்பானாவிற்கு தன்னால் இயன்ற  உதவிகளையெல்லாம் செய்து வந்தால் பரீனா.தன்னோடு ஓர் தாதியாகவும் சேர்த்துக் கொண்டாள்.நஜீம் மீது உயிரையே வைத்திருந்த பரீனா. அவரது கீழ்த்தரமான இந்தச் செயலை நினைத்து நினைத்து இரவு நேரங்களில் தலையனையை ஈர மாக்குவதுடன் சுடுமணலில் துடிக்கும் புளுவைப் போல் துடித்தாள்.உடல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நஜீம் அவள் காதைப் பிடித்து கட்டிலுக்கு அழைக்கும் போதெல்லாம் அவரது மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடதென்பதற்காக விலகிப் போவாள் சில நேரங்களில் தன்னையும் மறந்து நஜீம் மீது கோபமடைவாள். நாளமையில் அவனது உடல் நிலை பரீனாவிற்கு தாங்க முடியாத துயரத்தையும்,சிந்தனைகளையும் ஏற்படுத்தியது.தன் வாழ்க்கை சோகமான வரலாறாகிவிட்டதாக நினைத்தாள்.கடைசியில்,நஜீம் நினைவை விட்டு விலகி தனிமையில் வாழ முடிவெடுத்தாள்."இர்பானா நீ என்ன சொன்னாலும் சரிடி;நான் எடுத்த இந்த இறுதி முடிவை நான் ஒரு போதும் மாற்றிக்கவே மாட்டேன்டி". "பரீனா .....இப்பத்தாண்டி தெரியுது ....உன் நஜீமை விட்டு விட்டு எதுக்காக நீ ஓர் இறுதி முடிவு எடுத்துள்ளாய் என்பது. எப்படியாவது நஜீம் மூளைக்கு அதிகமான வேலை கொடுக்காமல் அவரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென்ற என்ற எண்ணம் உனக்கு இருக்கு. தானும் மாற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கும் உண்டு.இவர் இனி பிழைத்து மனிதராக மாட்டாரோ என்று நீ நினைத்து இப்படி ஓர் முடிவை எடுத்துக் கொண்டாயோ? "அப்படியொரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் எப்பவோ நான் அவரைவிட்டு விலகி என் பெற்றோர் பேசி பிடிவாதமாக கட்டிக் கொள்ளும்படி கூறும் சொந்த மச்சானை திருமணம் செய்திருப்பேன். இத்தனை வருடகாலமாக இவருக்காக நான் இப்படி வாழ்ந்திருக்கவே மாட்டேன்".பரீனா சொல்லி முடித்து தலை நிமர் தாதி ஒருவர் வந்து அழைத்தாள்.பரீனா எழுந்து சென்று நஜீமை பார்க்கச் சென்றாள்.நஜீம்;"பரீனா ,என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் வருத்தம் நல்லாச் சுகமாகி விட்டது.வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுகின்றேன்.என் டிக்கட்டை வைத்தியசாலையிலிருந்து கட் பண்ணி விடுங்கள்".சற்று நேர மௌனத்திற்குப் பின் பரீனா சொன்னால் "நஜீம் வசதியான குடும்பத்தில் பிறந்த நீங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே? நான் உங்களுக்கு என்ன துரோகமா செய்தேன்.இப்பே நீங்களாகவே நோயை தேடிக் கொண்டீர்களே ,திடீரென்று பரீனா பரீனா என அழைக்கும் அழைப்பை கேட்டு திரும்பினாள்.இர்பானா ,என்னடி வந்திட்டியா? ஆமாடி .எப்படி நஜீம் வருத்தமெல்லாம் இர்பானா கேட்டாள் கொஞ்சம் பரவாயில்லை இர்பானா . "பரீனா நஜீம் பாவம்டி உன் பிரிவைத் தாங்க முடியாமல் தான்டி அவர் இந்த நிலைக்கே தள்ளப்பட்டார்.நீதான்டி அவருக்கு நோய் ஏற்பட காரணமாக அமைந்தவள்".இர்பானாவை முறைத்துப் பார்த்தாள் பரீனா அவள் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் கண்ணீர் வடித்தது."இதோ கேள் பரீனா....நஜீம் என் உடன்பிறந்த தம்பியடி.என் பெற்றோருக்கு இவன் மட்டும் தாண்டி ஆண் செல்வம்.என் தாய் இவனை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள்.என் தாய் காலமாக  தந்தை இன்னும் ஓர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் இவனையும் கூடவே கூட்டிச் சென்று இந்த நிலைமைக்கு படிக்கவைத்தார்.நான் என் சிறிய தாயிடம் இணைந்து கொண்டேன்.அதனால் எங்கள் இருவரது பாசங்களும் பிரிவில் வாடியது என் தம்பியின் தரத்திற்கும் , என் ஏழ்மையின் நிலைக்கும் இடைவெளிகள் பல.... அதனால் தாண்டி பரீனா என் தம்பியிடம் நான் தாத்தா என்பதை சாட்டிக் கொள்ளவில்லை.உன் மனதை விட மேலாக என் மனம் வேதனைத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.இர்பானா.....அப்போ நீ என் மைனியாடி....?ஏண்டி இத்தனை வருடமும் என்னிடம் மறைத்தாய்....இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இர்பானாவின் தலையை தடவிக் கொண்டே   அழுதாள்.இர்பானா என் வாழ்க்கையில் தான்  துன்பமும்,வேதனையும் நிறைஞ்சிருக்கின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் அது உன்னுடைய வாழ்க்கையிலேயும் நிறைஞ்சிருக்கு என்பதை இப்போ நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப் போனால், துன்பத்தின் மத்தியில் தான் இன்பமே உண்டு  என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன்......இனிமேல் என்னவரை.ஆமாம் உன் ஆசைத் தம்பி நஜீமை விட்டுப் பிரிந்து ஒரு நிமிடம் கூட விலகி வாழவே மாட்டேன்னம்மா உறுதி.கன்னத்தில் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டே பரீனா இர்பானாவை அழைத்துக் கொண்டு நஜீமை பார்க்கச் சென்றாள்.இர்பானா நஜீமை கட்டியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தால் நஜீம் ஒன்றும் புரியாது விழித்தான். பரீனா விடயத்தை விபரமாகச்  சொன்னாள்.இருவர் கண்களிலும் கண்ணீர் வடிந்தோடின. அது ஆனந்தக் கண்ணீர் தான். இர்பானா மீண்டும் நஜீம் சென்று தம்பி. பரீனா ஓர் பெயர் பெற்ற தரமான டாக்டர்.இறைவன் துணையால் அவன் உன் நோயை சுகப்படுத்துவாள்.முதலில் நீ என்னில்லம் போக வா......இரவைக்கே உங்கள் இருவரையும் நான் மனப்பூர்வமாக இணைத்து வைக்கின்றேன்.என்று அன்போடு அழைத்தாள்.பக்கத்து வீதியில் அமைந்திருந்த ஹோட்டலில் இருந்து வானலை ஊடாக....,
                                                            நல்வாழ்த்து நான் சொல்வேன்.........
                                                            நல்லபடி வாழ்கவென்று....
                                                            கல்யாணக் கோயிலிலே
                                                            கணவன் ஓர் தெய்வம்மா......

எனும் பாடல் தவழ்ந்து கொண்டிருந்தது.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கன்னிப் பூவில் காளை வண்டு !!!

றிஸ்வானின்  அழகிய விரல்கள் டைப்ரைட்டருடன் உறவாடிக் கொண்டிருந்தன. மேலே சுழன்ற மின் விசிறியின் செயற்கைக் காற்று அவன் அலை போன்ற கேசத்தைத் தழுவி மேலும் அழகு படுத்தினாற் போல் பறக்க விட்டுக் கொண்டிருந்தது.பக்கத்திலே அவனின் தங்கை நாசிலா குறும்பு பண்ணிக் கொண்டிருந்தாள்.அவசரமான ஒரு கடிதம் ஒன்றை ரிஸ்வான் டைப் செய்து கொண்டிருந்தான். றிஸ்வானின் வேலையைக் குழப்பிக் கொண்டிருந்த நாசிலாவை சிம்ரா ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள்.நாசிலாவும் அடம்பிடிக்காமல் சிம்ராவோடு ஒட்டிக் கொண்டாள்.அட சிம்ராவா; குழந்தையை அழகாத் தூக்குறியே என்று புன்னகையோடு சொன்னான் றிஸ்வான்.அவனின் அழகிய புன்னகையில் சில நிமிஷம் தன்னையிழன்தவள் ......... இது பெரிய வித்தையா ? பிள்ளையைத் தூக்கத் தெரியாத ஒரு பெண் இருக்க முடியுமா? என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.சிம்ராவின் அழகான பின்னழகை ரசித்த றிஸ்வான் மீண்டும் வேளையில் மும்முரமானான். றிஸ்வான் டாக்டர் ஷரீபின் ஒரே மகன்.படித்து விட்டு எப்படியெல்லாமோ பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். தந்தையிடம் இருக்கும் ஏராளமான சொத்துக்கள் அவன் படிக்கத்தான் வேண்டும் என்ற கொள்கையை மாற்றியது.உத்தியோகம் ,புருசலட்சணம் என்ற இலக்கணத்தைத் தொலைத்து விட்டு வீட்டில் றிஸ்வானோடு தந்தைக்கு கோபம் வராவிட்டாலும் அவன் படித்து ஒரு உத்தியோகம் பார்க்கவில்லையே என்று உள்ளூரக் கவலையாயிருந்து. படித்தவர்களின் பிள்ளைகள் படிப்பதில்லை. இது பல இடத்து நிகழ்வுகள் பணக்கார இடங்களில் செல்வம் அதிகமாகிப் பிள்ளைகள் வழி தவறி விடுவதுண்டு.ஆனாலும் றிஸ்வான் எதோ உருப்படியான வேலைகள் செய்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கென்று ஏராளமான சொத்துக்களும் அவன் பெயரில் பெரிய கம்பனி ஒன்றுமிருந்தது.சிம்ரா டாக்டர் ஷரீப் வீட்டு வேலைக்காரப் பெண் . சின்ன வயதிலிருந்தே  அங்குதான்  இருக்கிறாள்.அந்தக் குடும்பத்தில் அவள் வேலைக் காரியாக இருந்தாலும் அன்பாக நடாத்தப்பட்டாள்.தாய்,தந்தை இருக்கிறார்களா இல்லையா என்பது கூட அவளுக்குத் தெரியாது.சொல்லப் போனால் அவர்கள் உருவமே அவள் நினைவில் இல்லை.சிம்ரா;சிம்ரா ஷரீபின் மனைவி அழைத்த ஒலி கேட்டு விரைந்து சென்றாள்.டாக்டருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் றிஸ்வான் .அடுத்தது நாபியா .கடைசி நாசிலா .நாபியா யாழ்ப்பாணத்திலுள்ள இராமநாதன் கல்லூரியில் உயர் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்தாள்.ஷரீபின் மனைவி நிஸ்மியா நல்ல குணமுடையவள்.என்றாலும் எல்லாவற்றிலும் ரொம்பக் கவனமாக இருப்பாள்.அவள் சிம்ராவை அழைத்துச் சொன்ன விஷயம் சிம்ராவுக்குப் பெரிய தலையிடியைத்  தந்தது. சிம்ரா இரவைக்கு நாங்க யாழ்ப்பாணத்துக்குப்  போகிறோம்.நீயும், நாசிலாவும் இருங்க.றிஸ்வான் அநேகமாக வரமாட்டான்.மட்டக்களப்பில்  தான் இருப்பான்.நாங்க மூன்று நாட்களில் வந்து விடுவோம் என்றான்.சிம்ரா பொம்மையாகத் தலையாட்டினாள்.அவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் போய் விட முன் சிம்ராவுக்கு நிறைய வேலை வைத்துவிட்டுப் போனார்கள். சிம்ராவின் மனதுக்குள் மெல்லிய ஏக்கம் படர்ந்தது.அது றிஸ்வானைப் பற்றியது.கொஞ்ச நாட்களாக றிஸ்வான் அவனைப் பார்க்கும் விதமே வேறாக இருந்தது.தெளிந்த நீரோடையாய் இருந்த அவளின் உள்ளத்தில் சலனக் கற்களை வீசி விட்டுக் குறும்பு பண்ணிக் கொண்டிருந்தான் றிஸ்வான்.வீட்டுக் காரர் இல்லாத நேரத்திலே றிஸ்வான் வராமலிருப்பது நல்லது என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.நாசிலாவுக்கு நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்து விட்டுத் தூங்க வைத்து விட்டாள். ட்ரிங்.....ட்ரிங்.....அழைப்பு மணி ஒலிக்கின்றது.யாராக இருக்கும்? சிம்ரவுக்குப் பயமாக இருந்தது.கதவைத் திறந்தவள் திகைத்துப் போனாள். றிஸ்வான் புன்னகையோடு உள்ளே நுழைந்தான்.நீங்க வரமாட்டீங்கன்னு சிம்ரா அவனைப் பார்த்து தடுமாறிக் கேட்டாள்.பயந்துட்டியே சிம்ரா....மம்மிகிட்ட அப்படிச் சொன்னேன் உன்னைப் பார்க்கனும்னு ஆசை வாறதே ;என் வீடு இது வருவேன் போவேன் நீ எதுக்குப் பயப்படனும்; றிஸ்வானின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்.சாப்பாடு வச்சிருக்கேன் மேசையிலே சாப்பிடுங்க.என்றால் சிம்ரா;உடையை மாற்றிக் கொண்டு சாப்பிட அமர்ந்த றிஸ்வான் எங்கே நாசிலா என்று கேட்டான்.அவள் தூங்கி விட்டாள் என்று சொல்லிக் கொண்டு சிம்ரா அவசரமாக உள்ளே சென்று விட்டாள்; ஏய்.....ஏய் எங்கே ஓடறே சிம்ரா' என்று எழுந் றிஸ்வான் அவள் கைகளைப் பற்றி விழிகளை நோக்கினான். விடுங்க  றிஸ்வான்.இது ரொம்பத்  தப்பு கண்களில் நீர் மல்க சிம்ரா சொன்னாள்.சிம்ரா   என்கூட சாப்பிடுறியா என்று அவன் சின்னப் பிள்ளையைப் போல கேட்டான்.சிம்ராவுக்கு எதுவும்  பேச முடியாமல் உடம்பு ஆடியது.வேண்டாங்க நீங்க வர மாட்டிங்கன்னு தானே உங்க மம்மி சொன்னாங்க.எனக்குப் பயமா இருக்கே என்று மறுத்தாள்.றிஸ்வான் விடவில்லை,அவள் முடிந்தவரை மறுத்தும் பலனில்லாமல் போய் விடவே அவனோடு சாப்பிட்டால் சிம்ரா.நான் உங்களையே திருமணம் செஞ்சிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.நீங்க என்ன பதில் ? என்று கேட்டான் றிஸ்வான்.அவள் மெளனமாக சாப்பிட்டுவிட்டு மேசையைத் துப்பரவு செய்வதில் முனைந்தாள்.பதில் பேசவேயில்லை.அதெல்லாம் அப்புறமாக செய்யலாம்.சிம்ரா இங்கே வா.ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று ஜாடை செய்தான்.சிம்ராவுக்குப் பெரிய தொல்லையாகி விட்டது.ஆமாம் அன்புத் தொல்லை யாகிவிட்டது. அவன் எதிர்பாராமல் ஒரு ரூமிற்குள் சென்று கதவை மூடி விட்டு உள்ளே இருந்து விடலாம் என்று நினைத்தவள் ரூமை நோக்கி விரைவாகச் சென்றால். அதற்கிடையில்  றிஸ்வானும் பின் தொடர்ந்து சென்று ரூம் கதவை அடைத்து விட்டு பெரிதாகச் சிரித்தான் .என்னை ஏமார்த்தப் பார்த்தீங்க இல்ல. இப்ப எப்படி? றிஸ்வான் அந்த வேகத்தில் அவளை மார்போடு அணைத்தான்.அவன் சிணுங்கினாள் , நெளிந்தாள், விடுங்க றிஸ்வான் என்று சொல்லத்  தோன்றியும் சொல்லாமல் தோன்றியும் சொல்லாமல் அனுபவித்தாள்.நீங்க என்னை மனைவியா அடைய உங்க மம்மி விடு வாங்களா? டடி விடுவாரா? என்று கேட்டாள் சிம்ரா.'அதெல்லாம் சமாளிச்சிடலாம்.சிம்ரா' என்று அவன் குழைந்தான்.றிஸ்வான் ஒரு கன்னிப் பூவில் காளை வண்டு தனிமையிலிருந்தால் சங்கமம் கொள்வது சகஜம் . ஆனாலும் நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ற பூவை நாடிச் செல்லுங்கள்.அப்போ நான் தென்றலாய் என்றுமே மனம் வீசுவேன்.என்னைத் தயவு செய்து பின் தொடராதீர்கள்.எமது இளமைத் துடிப்பில் நாம் இருவரும் ஓர் முடிவு எடுத்தாலும் அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகும்னு யோசிக்க வேண்டும் என்றால் சிம்ரா.ரிஸ்வான் சிம்ராவைப் பார்த்து 'முதல்லே'முன் விதைப்பதை நல்ல விதைத்திடுவோம்.பிறகு தான் பின் விளைவுகள் அறுவடை நன்றாக இருந்தாள் நிச்சயம் வீட்டார் மகிழ்ச்சியடைவார்க'ளென்று' சொன்னான்.அவனது வார்த்தைகளிலிருந்த உறுதியும்,இறுக்கமும் சிம்ராவின் இதயத்தில் உருண்டு கொண்டிருந்த ஒரு மெல்லிய பயத்தைத் தொட்டுத் துடைத்தது. 'றிஸ்வான் நீங்க நிச்சயம் எண்ணைக் கண் கலங்காம வாழ வைப்பீர்கள்.ஆனாலும் நான் உண்ட உணவுக்காவது சரி துரோகம் செய்யக் கூடாது தானே....ஓர் ஏழை என்ற வேற்றுமையே இல்லாது பாதுகாத்து வளர்த்த உங்கள் வீட்டாருக்கு நான் வேதனையை ஏற்படுத்தக் கூடாதே; அவர்கள் என்னை மனதார வெறுத்து விட்டால் என் மனம் நிம்மதியை ஒரு நாளும் அடையாது' கூறினாள்.'சிம்ரா பணத்தோடு பணம்  சேரும் குணத்தோடு குணம் சேரும் .உங்களிடம் பணம் இல்லை என்பது உண்மை.ஆனால் குணம் இருக்கின்றது.அதனால் குணத்தோடு குணம் சேர்வதில் தப்பில்லையே; என்னைப் போன்ற பணக்கார ஆண்கள் உங்களைப் போன்ற ஏழைகளைக் கரம் பிடித்தால் நிச்சயம் எமது சமுதாயத்தில் வரதட்சணை என்ற தொற்று நோய் பரவவே மாட்டாது.ஏழைக் கன்னிகள் கண்ணீர் வடிக்க வேண்டியது வேண்டிய நிலை ஏற்படாது.எமது திருமணம் ஏனையோருக்கு ஓர் படிப்பாக அமையலாம்'என்று கூறினான் றிஸ்வான்.நேரம் நகர்ந்தது;தன்னை விடுவித்துக் கொண்டு சிம்ரா எதிர்காலக் கற்பனையில் மூழ்கினாள். றிஸ்வான் எப்படியும் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பினாள்;றிஸ்வான் பெற்றோர் வரும் நேரமறிந்து  வெளியேறிவிட்டான். டாக்டரும் மனைவியும் அவர்கள் மகளும் வந்திருந்தனர்.வீடு அமர்க்களப்பட்டது;சிம்ராவுக்கு மனம் குறுகுறுத்தது.பெரிய தப்புப் பண்ணிவிட்டதை நினைத்து மனதுக்குள் அழுதால்.எப்படியும் றிஸ்வான் கைவிடமாட்டார் என்று நம்பினாள்.வாரம் ஓன்று கடந்தது;ரிஸ்வானைத் தனிமையில் கண்ட சிம்ரா எப்படி மம்மியிடம் சொல்வீர்கள் என்று கேட்டாள்.றிஸ்வான் சொன்னான்;மம்மிகிட்ட சொன்னா இது நடக்கவே நடக்காது. நிச்சயமா நான் உன்ன ஏமாத்தமாட்டேன்.அதனால நான் சொல்றபடி நீ செய்யனும், செய்வியா என்றான்.அவன் சொன்னது பார தூரமானதெனத் தெரிந்ததும் சிம்ரா பேசா மடந்தையானாள் .இருவரும் ஒரு முடிவுடன் பிரிந்தனர்.அடுத்த நாள் காலை வீடு வெறிச்சோடிக் கிடந்தது "சிம்ரா....சிம்ரா" எஜமானி கூப்பிட்டாள்.சிம்ரா வீட்டில் இருந்தால்தானே  வருவதற்கு ,நிஸ்மியாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.றிஸ்வான்  என்று கூப்பிட்டுக் கத்தினாள்.சிம்ரா எங்கே என்று கேட்டாள்.பதில் சொல்வதற்கு றிஸ்வான்  வேண்டுமே ,கனநேரப் போராட்டத்துக்குப்   பின் றிஸ்வானின் ரூமிற்குள் அந்தக் கடிதத்தைக் கண்டாள்."மம்மியும் டடியும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.நான் சிம்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பி அழைத்து வந்து விட்டேன் .இப்படிக்கு றிஸ்வான்.டாக்டரும் மனைவியும் ஆளையாள் பார்த்து முழித்தார்கள்.டாக்டர் ஷரீப் எப்போதுமே இளகிய மனம் கொண்டவரல்'இவன் இத முதலே சொல்லியிருக்கலா மில்ல.இது அவமானமாச்சே,ஓடிட்டானம் என்கிற பேர், அதுவும் வேலைக்காரியோட ஏற்கனவே தெரிஞ்சா கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கலாம்'என்று ஓரளவு தன்னையே சமாதானம் பண்ணி மனைவியிடம் சொன்னார்.இப்போது அவன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து இருவருமாக அங்கே செல்வதெனத் தீர்மானமாயிற்று.அதன் பின்னர் அந்த யோசனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விட்டது.ஓடிப் போனவன் போகட்டும் என்கிற எண்ணம் வளர்ந்தது.ஆனால் நிஸ்மியாவின் உள்ளம் தன் கண்ணே பொண்ணே என்ற ஒரே ஒரு தன் செல்லமகனை எண்ணி ஏங்கியது.காலம் கரைந்தது - வருஷமும் இரண்டாயிற்று.டாக்டர் ஷரீபின் வீட்டில் டெலிபோன் ஒலித்தது.யாரது....ஹலோ நான் மிஸிஸ் ஷரீப் பேசறான் என்றால் நிஸ்மியா. 'மம்மி நான்...நான் றிஸ்வான் மம்மி டடா எங்க?' றிஸ்வான் எப்படி மகன் சுகமா? சிம்ரா எங்கே...நீ இப்பவே வாடா உன்னைப் பார்க்கத் துடிக்கிறேன் என்று படபடத்தாள்.'சிம்ரா வரப் பயப்படுகிறா மம்மி என்றான் றிஸ்வான்.ஒன்னுமே.... ஆகாதுடா டடா கூட உன்னைக் கோபிக்க மாட்டார்.இங்கேயே வந்திடு" என்றால் அந்தப் பாசமிக்க தாய்.'மம்மி இப்ப யார் பேசுறது சொல்லுங்க என்றான்.டடாம்மா  ட....தாம்மா வாங்க சின்னக் குரல் ஒலித்தது.அடடே பேரன் எனக்கு இருக்கான். இதோ நானே வந்துடறேன் என்று பேசி முடித்துவிட்டு அவன் விலாசத்தைப் பெற்று குடும்பமாக மகனின்;வீட்டுக்குப் போனார்கள்.சிம்ரா மாமியை கட்டிப் பிடித்து அழுத்து மன்னிப்பு வேண்டினாள்.மருமகளை அணைத்து முத்தமிட்டபடி நல்ல இதயம் கொண்ட மாமி....வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.சிம்ராவின் உள்ளம் குளிர்ந்து.றிஸ்வான் அவள் காதோடு எதோ குசுகுசுத்தான்.சிம்ரா நாணத்துடன் முகம் சிவந்தாள்.அவனுக்கு மகிழ்ச்சி. கார் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

திங்கள், 21 மார்ச், 2011

வசந்த காலங்கள் !!!

சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன.கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான். ஆமாம்! எனது ! மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை ,ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன்.அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே  என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும்.என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான்.அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன்.என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான்.படிப்பில் மட்டும் தான் போட்டி.மற்றும் படி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம்.பாடசாலையில் கூட ஜெபரீன்,ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும்.படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை.மாமிக்கும் ,மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும் .கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள்.இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!."என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?" என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன்."இல்ல....அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு.அதுதான் யோசிக்கிறேன்" என்றேன்."உம்மா கூடச் சொன்னாங்க....என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்" என்றார் மச்சான்.ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ் வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை.ஆனால் நெற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது.அதற்கு காரணமும் இருந்தது.எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள்.இதை என்னிடம் மாமி சொல்லிய போது ...நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன்.மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள்.அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை....எழுந்து நிற்கிறேன். "என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா...? இன்னும் யோசிக்கிறீங்களே! என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன்.இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள்.இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது.புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார்.மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் "மச்சான் படித்து விட்டு வரட்டுமே " என்று .அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது.மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின.என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார்."ஜெபரீன் ...! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம் .அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! " என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது.சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன் . நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது.ருவைஸ் வந்ததும் திருமணம் தான் ! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார்.எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன் .தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன்.நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது.என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது.என் விழிகள் மச்சானைத் தேடின."உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்."என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன்.என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன்  நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்..

ஞாயிறு, 20 மார்ச், 2011

உதவாத உள்ளம்!!!

"உம்மா...உம்மா...தாயே...? மிஸ்கீன் வந்திருக்கேன் உம்மா....ஏதாச்சும் ஹதியா தாங்கம்மா ..."குரல் கேட்டு முகம் சுழித்தவளாய் அவசரமாக விரைந்து வருகிறாள் றிபா."ஏய்...சனியனே...! இந்த விடி காலையில் உனக்கு என் வீட்டை  விட்டா அக்கம் பக்கம் வேறு வீடே  இல்லையா....?" "உனக்கு தர சில்லறை இல்லை. தொலைந்து எங்காவது போ" றிபாவின் இரக்கமில்லாத மனதையும்,முட்டாள் தன பேச்சையும் கேட்ட  அந்த ஏழை மாதுக்கு ஈட்டியால் குத்தியது போன்றிருந்தது.தாங்க முடியாத மனவேதனை! கண்ணீர் துளிகளாய் சிதறியது. இப்படியும் எம் சமூகத்தில் பெண்கள் இருக்கின்றார்களே! நீண்ட பேறு மூச்சுடன் வெளியானாள்.வீட்டுக்கு  யாசகம் கேட்டு வரும் ஏழைகளை வெறும் கையோடு திருப்பி அனுப்பாதீர்கள் என்று எமது மார்க்கம் சொல்லுகின்றதே! யா.. அல்லாஹ் பெண் மனசு மென்மையானது,இரக்கமானது என்று சொல்லுவார்களே...! ஆனால் இந்த பெண் மனசு வன்மையாகி விட்டதே! ஏழைக்கு உள்ள இதயம் கூட இந்த பணக்காரர்களிடம் இல்லையே! நீதான் இவர்களுக்கு நல்ல மனத்தைக் கொடுக்கனும் அல்லாஹ்! கவலை நிறைந்த இதயமுடன் போய்  கொண்டிருந்தாள். முன் ஹோலில் தூங்கிக் கொண்டிருந்த சில்மியின் காதுகளில் உம்மா றிபாவின் கொடுமையான வார்த்தைகள் தீயாய் விழுந்தன. "அடுத்தவன் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே" என்று எமது மார்க்கம் சொல்கிறது.ஆனால் எம் வீட்டில் நடப்பதோ எதிர் மாறானதே! நினைத்துப் பார்க்கவே அவன் கண்கள் கண்ணீரை வடித்தன.கேட்டு வந்த அந்த ஏழையை ஏசி விரட்டி விட்டாங்களே உம்மா! எவ்வளவு தான் இருந்தும் கூட இல்லாதது போல் அல்லவா நடந்து விட்டார்கள்.கல் மனமாவது அந்த ஏழை பெண்ணின் அன்பான குரல் கேட்டால் கரைந்து போய் விடுமே! இடது கைக்கு தெரியாமல் கொடுங்கள் என்று சொல்லியுள்ள எம் அண்ணலாரின் அமுத வாக்காவது இவங்களுக்கு  தெரியவில்லையே...... எப்ப தான்  இவர்கள் மணம் திருந்துமோ...? சின்ன மகன் சில்மியின் சிந்தனையில் பென்னம் பெரிய எண்ணங்கள் உருவாகத் தொடங்கியது. அடுத்த கனம்,வீட்டை விட்டு வெளியேறினான். அவன் செலவுக்காக பெற்றோர் கொடுத்த பணத்தையெல்லாம் சேகரித்து வைத்த உண்டியலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அந்த ஏழை பெண்ணைத் தேடி நடந்தான். "தன்னைப் போல் ஓர் பெண் தானே அவள்" நினைத்துப் பார்க்கத் தவரிய தாயை நினைத்து கவலைப் பட்டான் சில்மி.லுகர் தொழுகை நேரமானதால் தொழுது விட்டே அந்தப் பெண்ணை தேடிச் செல்லலாம் என்று நினைத்தவாறு பள்ளிக்குச் சென்றான் அவன். பள்ளியின் பின்னால் இருந்த அகதிகள் வாழும் இருப்பிடத்தின் முன்னே சோகமாக இருந்த அந்த ஏழைப் பெண்ணைக் கண்டு எதுவுமே செய்ய முடியாது தவித்தான்."உம்மா ....ஏன்...உம்மா  கவலையா இருக்கீங்க... நீங்க எந்த...ஊர்...?எப்படி இங்கு வந்தீங்க...? நீங்களும் இந்த அகதிகளோடா  இருக்கீங்க...?" பாசத்தோடு பதறிப் பதறி கேள்வி மேல் கேள்விகள் கேட்கும் அந்த பையனைப் பார்க்க அவளுக்கு வியப்பாகவும் கவலைகள் மறந்து மனம் சந்தோசமாகவும் இருந்தது. "அது சரி நீங்கள் யாரு மகன்?" தலைமுடியை  தடவிக்   கொண்டே வினவினாள் அவள்."நான்...நான்....உம்மா...இப்ப உங்களுக்கு ஏசி விரட்டினாங்களே அந்த பெரிய வீட்டு உம்மா... அவங்கட ஒரே ஒரு மகன் நான் தான். எங்கட உம்மா முன் பின் யோசிக்காம உங்கள எசிட்டாங்க. அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் உம்மா. அல்லாஹ்வுக்காக அவங்களை மன்னிச்சிடுங்கம்மா.இந்த பணத்தை வேண்டாமென்று சொல்லாம வங்கிக்கோங்கோ" இப்படியான நல்ல மகனை பெற்றவளா அந்த தாய்...? அப்படி திட்டித் தீர்த்தாளே! " மகன்  அல்லாஹ்  உங்களுக்கு  ரஹ்மத் செய்யட்டும்! மறுமையில் அகிலத்துக்கே அருட்கொடையாக அவனியிலே வந்துதித்த எம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற ஏழைகளுடனே தான் இருப்பவர்கள் மகன். அந்த பாக்கியத்தை விடவா மகன் இந்த பேச்சுக்களும்! ஏச்சுக்களும்!  மகன் நான் ஒரு பணக்கார பெண் 1990ம் ஆண்டு கிழக்கு மாகாண கிராமங்கள் தாக்கப்பட்டதில் என் பெற்றோரை துப்பாக்கி பலியாக்கி விட்டது. அவங்கடமௌனத்துக்குப் பிறகு உடமைகளை இழந்து வீடு வாசல்களை விட்டு உடன்பிறப்பு ஒரே ஒரு நானா அவரையும் பிரிந்து அகதியாக புத்தளம் வந்து சேர்ந்தேன் மகன்.என் நானா என் நனாஸ் பாசமுள்ளவர்.அவரைத் தேடித் தேடி தவிக்கின்றேன்.தொடர்ந்து தேடிக் கொண்டே தான் இருக்கின்றேன். ஆனால் என் அன்பான நாணவைக் காணலியே...!"குரல் தள தளக்க கண்கள் கண்ணீரை வடிக்க வேதனையோடு மீண்டும் தொடர்ந்தாள்."மகன் உன் முகத்தை பார்க்கும் போது எனக்கு உன் மீது ஒரு தனிப்பட்ட பாசம் வருது.என்னட நானா முகச் சாயல் கூட உன் முகத்திலே தெரியுது மகன்...." அவளின் வேதனை நிறைந்த செய்திகளைக் கேட்டு சில்மியும் கண் கலங்கினான். சரிம்மா ...நீங்க கவலைப்பட வேண்டாம்! நான் அடிக்கடி வந்து உங்களைப் பார்க்கிறேன்.உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் நான் என் வாப்பாவிடம் சொல்லி நிறைவேற்றுகின்றேன். இப்போ நீங்க போய் கொஞ்சம் தூங்கி எழும்புங்க எல்லா சோகமும் தானாகவே போய் விடும்." என்று கூறிவிட்டு திரும்பி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் சில்மி அஸர் தொழுகைக்காக  மீண்டும் பள்ளிக்கு சென்ற போது...ஜனங்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு என்னவென்று பார்ப்பதற்காக போனான். அங்கே அவன் கண்ட காட்சி மனத்தை இடித்து உடைப்பது போலிருந்தது.ஆம்! திடீரென்று மாரடைப்பு வந்ததால் அப் பெண் மரணத்தை தழுவியிருந்தாள்.அப்பெண்ணைக் கண்ட ஜனங்கள் எல்லாம் கவலையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.முகாமில் உள்ளவர்களின் கண்களும் கலங்கிப் போயிருந்தன. பிறகு சிறிது நேரத்தில் அடிக் கழுவி ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக சிலர் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.சில்மியின் மனசு எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தது.சில்மி அழுகையுடன் வீடு நோக்கி வருவதைக் கண்ட றிபா "ஏன் மகன் அழுதுகிட்டு வாறீங்க ...முகம் சிவந்து போய் இருக்கே என்ன நடந்திச்சு  சொல்லுங்க மகன்." அவன் நடந்த விடயங்களை அழுது அழுதுசொல்லி முடித்தான்.அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த றிபாவின் கணவர் சியாம் "மகன் அந்தப் போம்புள்ள வேறு என்ன சொன்னா?"என்று கேட்டார். "வாப்பா என்ன பார்க்குறப்போ ...அவங்கட நானாவைப் பார்க்கிறது போல இருக்குதாம்.ஏன் மீது தனிப்பட்ட பாசம் வருகிறதாம் என்று சொன்னப்பா" சியாமுக்கு சம்மட்டியால யாரோ தலையில அடிப்பது போலிருந்தது.தன் மனைவி றிபாவைப் பார்த்த அவர் ,"றிபா யாரைக் காண வேண்டுமென்று துடியாய் துடித்துக் கொண்டு தேடி அலைந்து திரிந்தேனோ ...அதே ஜீவன் தான் என்னுடைய ஒரே ஒரு தங்கை பாத்திமா அவளாகத்தான் இருக்குமோ தெரியாது" சியாம் ஒரு கணம் தன் கடந்த கால வாழ்வில் நடந்து போன கசப்பான நிகழ்வுகளையெல்லாம் ஞாபகப்படுத்திப் பார்த்தான்."நாம் ஊர் தாக்கப்பட்ட  போது மக்களெல்லாம் வெளியேறி பள்ளிவாசல் வளவில் தானே அகதிகளாக குடியேறினார்கள்.அதில் எனது தங்கச்சியும் அடங்குவாலோ? அப்போ சல்மா சாச்சியோட தானே இருந்தா அப்படின்னா?...அந்த பொம்புள்ள என் தங்கச்சியா இருக்குமோ?..."விரைவாகப் போகின்றார் சியாம்.கூடவே றிபாவும்,சில்மியும் சென்றனர். "சியாம் நீங்களா ...வாங்க மகன் பாருங்க உங்கட தங்கச்சி பாத்திமா! மௌத்தாகி  போயிட்டா..."என்று சாச்சி துடித்து அழுவதைக் கண்ட சியாமுக்கு இந்த ஊரிலே தன் தங்கை இருந்த செய்தி தெரியாமல் போனது தலைவிதியகத் தோன்றியது.வேதனைகளை எல்லாம் மறந்து றிபாவின் மைனி பாத்திமா நிம்மதியாக மீளாத்துயிலில்  மூழ்கியிருந்தாள்.அந்த ஏழை மாதுவின் மைனி றிபா தன் பணமே தன்மைனிக்கு உதவவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் திகைத்து நின்றாள்.






தங்கை நுப்ரா...

இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் "தங்கைகளை"புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும்.பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான்.அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  "நானாவை" மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. "அன்புள்ள நானா...! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!" "இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள்.நன்றிகள் நிழல்களாக! " "நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள்.அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன்.எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன். இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா." கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன்.அவன் எழுதும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள்,இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன.இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள் ,ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர்.இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா.அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது.நானா...நானா... என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.  தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான்.தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக "ட்ரெஸ் " பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான்.அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது "வாருங்கள்"என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது.அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்.அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது.இரண்டு,மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான்.நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள்.அதைப் போல் வீடும் கவர்ச்சியாக,அழகாக காட்சியளித்தது.நுப்ரா,வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள்.இடையில்,தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள்.ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.கடிதத்தில் "நானா...நானா..."என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட " நானா" எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது.பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை.அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். "ஏன் பேசாமலே இருக்கீங்க ...என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா...? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. "நீங்க நுப்ராதானே...?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். "ஆமாம்"என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். "நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா...?" என்று படபடப்போடு அவன் கேட்ட போது."ம் ...யாருமே  இல்லை.... உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க.....ஆனா....நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை.....நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே ...இனி  எதற்கு...."  "உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா.....? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். "பெண்களே இப்படித்தானோ"என  எண்ணியவன்  "நீ.....நானா...நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன் ....என்னை மன்னித்துக்கொள்"  "எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை " என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை "நானா " என அழைத்து ,வெறுப்போடு போக இருந்தவனை  திரும்பவும்  உற்காரவைத்தார்கள். கூடவே அவள்  பெற்றோரும்  சிரித்தபடி இன்ஷாத்தை  அன்போடு பார்த்தபடி  நின்றிருந்தார்கள்.இன்ஷாத்துக்கு  எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான். நானா தங்கை என்று பழகுவார்கள்  சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள்.ஆண்கள்  தனியாக  பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம்  தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு  வழங்கப்பட்டது. நுப்ரா "நானா.......நானா....."என  வாய்நிறைய  அழைத்து உபசரித்ததனால்  இன்ஷாத்  மகிழ்ந்து போனான். பின்னர்  அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

வெள்ளை மனசு...

தனியார்,மருத்துவமனை கட்டிலில் அக்பர் நோயாளியாகக் கிடந்தான்.அவன் விழிகள் ஒவ்வொரு வினாடியும் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தன.அவனுக்கு சேலைன் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தமையால்,உடலை அசைக்க முடியவில்லை...ஆனாலும் விழிகளை அசைத்து அசைத்து வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் இதயத்தில் எழுந்த வினாக் குறி வினாடிக்கு வினாடி அதிகரித்தது.பௌமியா என்னைப் பார்க்க வருவாளா? மாட்டாளா? என்பது தான் அது...
தனது உயிர் நண்பன் ஜப்ரானை அழைத்து,பௌமியாவை பார்க்க விரும்புகின்ற விடயத்தை தெரிவித்திருந்தான்.மருத்துவமனையில் தான் இருக்கின்ற செய்தியை அவளிடம் தெரிவிக்கும்படி தெரிவித்திருந்தான் அக்பர்.ஆனால் எவ்வளவு தாமதமாகிறது.ஏன் என்னை அவள் பார்க்க வரவில்லை..?ஒரு வேளை பௌமியா அவனை ஏசியிருப்பாளோ...?  அல்லது அவளது கணவனால் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ....?அக்பரின் சிந்தனைகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தின...
பௌமியாவிடம் எப்படியாவது மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்ற எண்ணம் அவனை என்னவோ செய்தது.தனக்குத் திடீரென ஏற்பட்ட நோயின் கொடூரம் தாங்காத அக்பர் தன்னை மரணம் விரைவில் தழுவிக் கொள்ளும் என எண்ணினான்.அதற்கிடையில் பௌமியாவை பார்த்து விட வேண்டும்.அவளுக்கிழைத்த துரோகங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றே அவனுள்ளம் விடாப்பிடியாய் எண்ணிக் கலங்கியது.நோயின் களைப்பு மிகுதியால் தன்னையறியாமலே தூங்கிப் போனான் அக்பர்.

ஜப்ரானுக்கு அதிர்ச்சியாக இருந்தது.எதையோ எதிர்பார்த்து வந்தவனுக்கு எப்படியோ விஷயம் முடிந்து விட்டிருந்தது.திருமணமான ஒரு பெண்ணிடம் உனது பழைய காதலன் பார்க்க விரும்புகிறான் என்று பொய் சொல்லுவது அவளை வேதனைப்படுத்தாதா...?பிரச்சினைகள் கிளம்பாதா...?தன் உயிர் நண்பன் அக்பரின் வேண்டுகோளைத் தட்ட இயலாமல் பௌமியாவின் வீட்டைக் கண்டுபிடித்து வந்தவனுக்கு,அங்கு கிடைத்த வரவேற்பு  அதிர்ச்சியை தந்தது.பௌமியாவிடம் அவன் வந்த விடயத்தைக் கூறிய போது அவள் பதற்றப்பட்டதாகவே தெரியவில்லை.பதிலாக அக்பரின் நிலையை எண்ணி தன் வருத்தத்தை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டாள்.ஜப்ரான் அங்கு சென்று சில நிமிடங்களில் வந்த பௌமியாவின் கணவன் ஜாஸியுடன் சிறிது நேரத்திலே ஜப்ரான் ஐக்கியமாகி விட்டான்.காரணம்,ஜாஸியின் பெருந்தன்மை அப்படி.பார்வையிலே பண்பினை அள்ளி வீசும் முகபாவம் கொண்ட ஜாஸியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்....?அதை விடவும் ஆச்சரியம்.பௌமியாஅக்பரை பார்க்கப் போகலாம் என்று கணவனை அழைத்தது.அப்படியென்றால்,அவருக்கு ஏற்கனவே  தன் காதலைப் பற்றி அவள் சொல்லிருக்க வேண்டும்.பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கும் ஜாஸி மதிய உணவுக்காக தன்னை இருந்து செல்லுமாறு ஜப்ரானை வினயமாகக் கேட்டுக் கொண்டார்.அடுத்து ஜப்ரானுக்கு கிடைத்த அதிர்ச்சி   மேலும் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த இரு குழந்தைகள் தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.பௌமியா அண்மையில் தானே திருமணம் செய்து கொண்டாள்.இந்த வளர்ந்த குழந்தைகள் யாருடையது......? "என்ன யோசிக்கிறீங்க மிஸ்டர் ஜப்ரான்" ஜாஸியின் கேள்விக்கு சட்டென்று தன் சந்தேகங்களைக் கூற முடியாமல் அவன் தடுமாறுவதைக் கண்டு,"இவர்கள்  எங்கள் பிள்ளைகள் இல்லை. பௌமியாவோட நானாவின் பிள்ளைகள்.சின்ன வயசில இருந்தே அவங்க பௌமியாக்கிட்டதான் வளர்ந்தாங்க...... இடையில வந்த நான் உண்மையான பாசத்தை எப்படி பிரிக்க முடியும்....? அவரே தொடர்ந்தார். "இவங்கட பேரண்ட்ஸ் பொரின்லே இருக்கிறாங்க. இவர்கள் நான் வெறுத்தா பௌமியா என்னை வெறுத்துடுவா? ...அவ்வளவு அன்பு இந்தப் பிள்ளைகள் மேலே..என் மேலேயும் தான்"என்று கூறி மென்மையாக சிரித்த அவரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜப்ரான்.இப்படியும் ஒரு இதயமா...? பௌமியாவின் மீதும், அவள் கணவனின் மீதும்  அவனுக்கு மதிப்பு வளர்ந்தது. பகலுணவை முடித்துக் கொண்டு பிள்ளைகளை பௌமியாவின் உம்மாவின் வீட்டில் விட்டு விட்டு மூவரும் நர்ஸிங் ஹோம் போகத்தயாராகினர்.

அக்பர் வாசலை பார்த்துக் கொண்டு பௌமியாவின் வரவுக்காகக் காத்திருந்தான்.பௌமியா தன்னைப்பார்க்க வருவாள் என்றே அவன் இறுதி வரையும் நம்பிக் கொண்டிருந்தான். அவள் வரவில் எல்லை இல்லாத ஆனந்தம் அடைந்தான்.பௌமியா அவளுக்கே உரிய பாணியில் அன்போடு பேசினாள்.அவளின் கணவன் கூட அக்பரோடு அன்பாகவே பேசினார்.இருவரின் அன்பிலும் அக்பர் திளைத்துப் போனான்.அக்பரின் நிலை பற்றி ஜாஸி டொக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தற்போதைய நிலையில் அவனை கவனித்துக் கொள்ள ஒருவர் அருகே இருக்க வேண்டும்.என்பதை அவர் உணர்ந்தார். பெற்றோரைப் பிரிந்து உயர் கல்விக்காக கிழக்கில் இருந்து கொழும்புக்கு வந்த அக்பர்,இங்கு ரூம் ஒன்றில் தான் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான்.இப்போது திடீரென்று ஏற்பட்ட நோய் பற்றி வீட்டுக்கு தெரியப்படுத்தினால் பெற்றோர்கள் பதறிப் போவார்கள் என்பதால் அக்பர், அவன் நிலையை வீட்டுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை.அந்த விடயத்தில் ஜாசியும் அவன் கருத்துக்கு உடன்பட்டார்.அப்படியானால் அக்பரை யார் பார்த்துக் கொள்வது......? ஜாஸியும் ஜப்ரானும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.அக்பர் சுகமாகும் வரைக்கும்  இருவரும் மாறி மாறி ஹொஸ்பிடலில்  தங்கி அவனை பார்த்துக் கொள்வது என்பதுதான் அது. சில நாட்களில் இரவில் ஜப்ரானும்,பகலில் ஜாஸியும், இன்னும் சில நாட்களில் இரவில் ஜாஸியும், பகலில் ஜப்ரானுமாக மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
இவர்களின் கவனிப்பாலும்,அன்பினாலும் அக்பர் விரைவிலே தேறினான்.அதன் பிறகு அவனை தங்கள்  வீட்டிற்கேதான் பௌமியாவும் அவள் கணவரும் அழைத்துச்  சென்றனர்.உடல் நிலை நன்கு தேறும் வரை இங்கே சில நாட்கள் இருக்கும் படி இருவரும் அன்பான உத்தரவு போட்டனர்.அக்பர் பௌமியாவோடு தன்னை ஒப்பிட்டு வெட்கப்பட்டுக் கொண்டான்.தான் செய்த துரோகம் எவ்வளவு பெரியது.இருந்தும் அவள் அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன்னை அன்போடு கவனித்துக் கொள்கிறாளே என்று பெருமிதம் கொண்டான். பௌமியாவைப் பொறுத்தவரை இருவரும் காதலித்தது உண்மை.திருமணம் செய்து கொள்ள குடும்ப சூழல் இடம் கொடுக்க வில்லை என்பதற்காக அவனை வெறுப்பதில் என்ன நியாயம் என்றே நினைத்தாள். ஆனால்,கோழைத்தனமாக வீட்டாரின்  எதிர்ப்பை சமாளிக்க தைரியமின்றி பௌமியாவை ஏமாற்றியதை துரோகம் என்றே அக்பர் கருதினான்.

புதன், 9 மார்ச், 2011

வெள்ளி பூத்து விடியும் வானம்!

விஸ்மிக்கு தன் மகன் கியாஸின் போக்கு அறவே பிடிக்கவில்லை! எதிர்த்துப் பேசிச் சண்டை போடுமளவுக்கு வளர்ந்து (வந்து)விட்டான்.
எவ்வளவோ புத்திமதிகள் சொன்னாள் விஸ்மி.கியாஸ் செவிமடுக்கவேயில்ல!தந்தை இல்லையே என்று செல்லம் கொடுத்து வளர்த்தது இவ்வளவு தப்பாய்ப்  போயிட்டு... என்று தனக்குள் அழுது கொண்டாள் விஸ்மி.ஆம் விஸ்மி ஓர் அநாதை. தன் கணவன் வெளிநாடு போனவர் அங்கேயே  'நானி' எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு,அந்த ஆசை நாயகியுடன் வாழ்வதால் தனது மனைவி, பிள்ளையை மறந்து விட்டார்.எந்தவித தொடர்புகளுமே இல்லாத கியாஸுக்கு அப்போது ஒரு வயது முடிந்து விட்டது.விஸ்மிக்கு கணவன் துரோகம் செய்த விடயம் தன் ஊர் நண்பர்கள் மூலமாக தெரிந்த போது அவளுக்கு தன் எதிர்கால வாழ்வு வெறும் சூன்யமாகவே பட்டது.என்ன செய்வதென்றே தெரியாமல் தடு மாறினாள்.தன் சொந்த ஊரில் பேசி வந்த திருமணங்களையெல்லாம் உதறித் தள்ளிய விஸ்மி மிக....மிக....எதிர்பார்ப்புக்களுடன், ஆசைகளுடன்,அன்புடனும் உயிருக்கு உயிராக முஹம்மதை திருமணம் செய்து கொண்ட நா(ள்)ல் இருந்து உற்றார்,உறவினர் என்று யாருமே அற்றவளாகி விட்டாள்.தன் சின்ன மகனுக்காக அன்றிலிருந்து உழைக்கத் தொடங்கினாள். அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலே வேலைகள் செய்து வாழ்வை ஓட்டினாள்! கியா(ஸ்)சையும் வளர்த்தாள்! நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தாள்! படிக்க விட்டாள்! எல்லாவற்றையும் விட அன்பை அடைமழையாய் பொழிந்தாள்! செல்லமாய் வளர்த்தாள்! கியாஸ் கேட்ட எதையுமே அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாவது வாங்கிக்கொடுத்தாள். பெரியவனாய் வளர்ந்த பின்னும் கியாஸை ஒரு குழந்தையாகவே எண்ணிச் செல்லம் பொழிந்தாள்! தந்தை இல்லாத குறையே  தெரியாத கியாஸ் தன்னிஷ்டம் போல எதையுமே செய்தான். வளர்ந்து வாலிப வயது வந்த பின் தான் பிடித்த முயலுக்கே மூன்று  கால் என்ற அளவுக்கு வந்து விட்டான். தான் எது செய்தாலும் அது நல்லது என்றே தாயுடன் வாதாடினான்.கெட்ட சிநேகிதர்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்க்கொண்டிருந்தான்.
துப்பாக்கி வேட்டுக்களும்,ஆட்கடத்தல்களும்,கொள்ளைகளும்,வாகன விபத்துகளும்,இயற்கை அழிவுகளும்,விலையேற்றங்களின் தாக்கங்களும் நிறைந்துள்ள கிராமத்துக்குள் வாழும் தன்மகனை நல்ல மனமுள்ள,உதவும்கரமுள்ள பிள்ளையாக வளர்க்க வேண்டுமென்பதே விஸ்மியின் ஆசையும்,எதிர்பார்ப்புக்களுமாகும்.
ஆனாலும் அவளது ஆசைகளும்,எதிர்பார்ப்புக்களும் மண்ணோடு மண்ணாகிப் போயின! விஸ்மியால் இனிமேல் பொறுக்க முடியவில்லை.நன்றாக ஏசிவிட்டாள்!
இதனை எதிர்பாராத கியாஸ்.....ச்சீ....நீயும் ஒரு தாயா.......? என்று கேட்டுவிட்டு....வாய்க்கு வந்தவாறு அவளை ஏசிய வண்ணம் வெளியிறங்கிப் போனான்.
விஸ்மிக்கு அழுகை வந்தது....எவ்வளவு அன்பாக வளர்த்தாள்....எவ்வளவு கஷ்டப்பட்டாள்...? நீயும் ஒரு தாயா..?என்று மகன் கேட்டதை நினைத்து நினைத்து கவலைப்பட்டாள்.......
வெளியே சென்ற கியாஸின் காதில் கேட்டது அந்த சொற்பொழிவு..
தனது அன்னை வருந்திச் சுமந்து (ஒருவனை) வருந்திப் பெறுகின்றாள் அவனை அவள் சுமத்தலும் பால் மறப்பித்தலும் முப்பது மாதங்களாகும்.
நபி(ஸல்)அவர்கள் ,"சொன்னார்கள் பெற்றோரே ஒரு பிள்ளையின் சுவர்க்கமும், நரகமும்  என்றும்.   
அதாவது  அவர்களுக்கு  (தாய்,தந்தைகளுக்கு நன்றி செலுத்தி வழிபட்டு நடந்தால் சுவர்க்கம் நன்றி கெட்டு மாறுசெய்தால் நரகம்.எனச்சொன்னார்கள். ஒருவன் தன் பெற்றோரின் மண்ணறையை ஜியாரத்துச் செய்வானாயின்  அவன் எடுத்து வைக்கும்   ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் நூறு  நன்மைகளை அவனுக்கு எழுதுகின்றான் . பெற்றோரிடம் நன்றியுடன்  நடந்து அவர்களை அன்புடன் நோக்குவானாயின்  அவனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுடைய  நன்மையை அல்லாஹ்  வழங்குகிறான்.இமாம் ஹஸனுள் பஸரீ(ரஹ்)அவர்கள் ஒரு முறை கஃபாவைத் தவாப் செய்து கொண்டிருந்தார்கள்.அது சமயம் ஒரு மனிதன் ஒரு பெரிய பெட்டியைத் தன் தோளின் மீது சுமந்தவனாகத் தவாப் செய்து கொண்டிருந்தான்.அம்மனிதனை விளித்து,'நீ ஒழுக்கக் குறையாக இவ்வளவு பெரிய பெட்டியைச் சுமந்து கொன்டு தவாப் செய்கின்றாயே ஏன்? எனக் கேட்டார்கள்.அப்பொழுது ஒழுக்கக் குறைவுடன் எதையும் செய்யவில்லை பெரியார் அவர்களே!நான் இப் பெட்டியில் தனது வயது முதிர்ச்சியால் தளர்ந்து போன என் அன்னை இருக்கின்றார்கள்.அவர்களால் தவாப் செய்ய இயலாது;அவர்களுக்குப் பகரமாக அக்கடமையை ஆற்றுவதன் மூலம் நான் என் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணிவிடையையும்,அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையையும் நான் நிறைவேற்றுவதன்  மூலம்,அவர்களுக்கு நன்றி செலுத்தியவனாகவும் ஆகுவேன் அல்லவா? எனக் கூறினான்..அவன்  கூறியதைக் கேட்ட இமாம் அவர்கள் "நீ கிழக்கிலிருந்து  மேற்குவரை எழுபது  முறை உன்  அன்னையச் சுமந்து  திரிந்துப்பணிவிடை செய்த  போதிலும் ,நீ உன் அன்னையின் வயிற்றில் புரண்டிட்டபோது   அவளுக்கு வேதனை ஏற்பட்டிருக்குமே,அதற்கு நிகராக நீ செய்திடும் இப் பணிவிடைகள் ஈடாகாது"என்றார்கள்.
"மன்ரலியே அன்ஹு வாலிதா ஹுஃப அன அன்ஹு ராலின்."என்று அல்லாஹ் ஹதீஸ்குத்ஸியில் கூறுகின்றான்.
எவனாவது பெற்றோர்கள் ஒருவனை பொருந்திக்கொள்கிறானோ,நேசிக்கின்றானோ,அவனை நான் பொருந்திக்கொள்கின்றேன்.என்று'
இதனால் தான்"தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கின்றது.முதுமைப் பருவத்தை எத்தி விட்டு பெற்றோரைக் கவனிக்காமல் அவர்களுடன் நல்லுறவு கொள்ளாமல்,அவர்கள் மனம் புண்படும் படி நடந்து கொண்டதன் காரணமாகப் பெற்றோரின் "பத்துஆ"விற்கு ஆளான பிள்ளைகள்,இறைவனின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகி விடுவார்களாயின் அவர்கள் சுவர்க்கத்தை அடைவது எளிதான செயலல்ல என்பதாகும்.
பெற்றோரின் சொல்லைத் தட்டி நடப்பவன் அல்லாஹ்வை விட்டும்,வானவர்கள் சுவர்க்கம் நல்லோர்கள் அனைவரையும் விட்டும் தொலைவானவன்.
எவன் தாய் தந்தையரை அடிப்பதற்காக கையை ஓங்குவானோ,அவனின் கையைக் கழுத்துடன் கட்டப்பட்டுப் பழுதாக்கப்படும்,"கை வெட்டப்பட்டு விடும்"அவன் சிராத்துல் முஸ்த்தகீம் என்னும் பாலத்தைக் கடக்கு முன்..
"எவன் பெற்றோரை ஏசுவானோ கப்றில் அவனது விலாப்புறத்தில் மழைத் துளிகளைப் போன்று நெருப்புக் கங்குகள் பறக்கும்"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அமைதியான முறையில் மார்க்கப் போதனையை கேட்டு விட்டு கியாஸ்  எழும்பினான்.
மனதில் வேதனைகள் தொடரலானது.ஆம்! தன் தாயை கேவலமாகப் பேசி விட்டேனே என்று!
வீட்டுக்குப் போய் தன் தாயை பார்ப்பதற்காக செல்லும் போது கியாஸின்  கண்களில் பட்டது இந்த காட்சி.
ஆம்! ஒரு ஜனாஸாவை தூக்கிக் கொன்டு கப்ரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
ஜனாஸாவிக்குப்  பின்னால் ஒரு சிறுவன் கதறி கதறி அழுது சென்ற காட்சி அனைவரையுமே அழவைத்தது.யார் மெளதானது என்று தெரியாமல் கியாஸ் ஜனாஸாவோடு சென்ற ஒரு மனிதனிடம் கேட்டான்...."இதோ இவனுடைய தாய் தான்"....உம்மா மட்டும் தான் இவனுக்குத் துணையாக இருந்தாங்க! வாப்பா இல்ல....பாவாம்....இப்ப உம்மாவும் மெளதாகிவிட்டா...அவன்,இனி யாருமே இல்லையே என்று கத்துறான்...அது மட்டுமல்ல....அவனுக்கு உம்மா மேல சரியான அன்பு!
உம்மாவும் மகன்மேல கொள்ளை அன்பு....இப்ப பிரிஞ்சிட்டப்போ இவன் துடிக்காம என்ன செய்வான் தம்பி...? இவ்வளவையும் சொன்ன மனிதன்,அழுது கொன்டு சென்ற சிறுவனை கியாஸுக்கு காட்டினான்.தன் தவறை உணர்ந்தான் கியாஸ்.தாயின் சிறப்பினை நினைத்துப்பார்த்தான்.


பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை!


கண்ணே! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே!
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதம்!


ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துவங்க வைத்தாள்! உய்வோம்.


பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்.
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள்!


பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துவங்க வைத்தாள்
தொட்டுப் பேசி துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை!


உதிரந் தன்னைப் பாலாய் உதிர்ந்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில்!

கவிதை மனதில் அலையாய் பொங்கியது!எவ்வளவு பாசம் என் அன்னை! நான் எவ்வளவு துன்பப்படுத்திட்டேன்,என்று நினைத்து கியாஸ்,உடனடியாக வீட்டுக்கு ஓடி உம்மாவைப் கட்டிப்
பிடித்துத் துன்பம் தீரும் வரை அழுதான்.இது வரை செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்...தாயின் உள்ளம் குளிர்ந்தது!மகனைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் விஸ்மி.........!
                                                                                                                 (முற்றும்)